Wednesday, March 19, 2025

 என் பார்வையில் காதல்

ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான். சிலரது வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ்வை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பொறுத்தே அமையும். 


அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. அதில் எந்தவித சுயநலமோ போலித்தன்மையோ இருக்காது.


இருவருமே எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நிபந்தனைகளற்ற அன்பே 

உறவுகளை வலுப்படுத்துகிறது.


தனது துணையின் மீது உண்மையான அக்கறை கொள்வதும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதும், கடினமான காலத்தில் அவர்களோடு இருப்பதும் மிகவும் முக்கியமாகும்.


தன்னால் முடிந்தளவு தனது துணைக்கு உதவியாக இருப்பது. அவர்களின் தேவை என்னவென்று மனோ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புரிந்து கொண்டு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். 


ஒரு உண்மையான காதலில் இத்தனை விடயங்களும் நிச்சயமாக இருக்கும். எனவே காதலிப்பது முக்கியமல்ல. உண்மையாக காதலிக்க வேண்டும் என்பதே முக்கியம். என் காதல் வாழ்க்கை எனக்கு இறைவன் 

கொடுத்த வரம்தான் 

 பெண்ணிய நாவல்கள் 

பெண்ணியச் சிந்தனை மரபினை இலக்கியவாதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்து வந்துள்ளனர்.


 மகாகவி பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன், ந.பார்த்தசாரதி, அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சமுத்திரம், பிரபஞ்சன், லெட்சுமி, சிவசங்கரி , இந்துமதி, இராஜம்கிருஷ்ணன், அம்பை, புதிய மாதவி போன்ற பெண் எழுத்தாளர்களும், பெண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து 

மிக சிறப்பான படைப்புகளைப் படைத்துள்ளனர்.


தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் பிரதாப முதலியாரின் மனைவியாக வரும் ஞானாம்பாள், கல்வி கற்றவளாகவும், போராடும் குணம் உள்ளவளாகவும் காணப்படுகிறாள். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைச் சமூகத்தில் இருந்து விடுபடும் முதல் பெண்ணாக இவள் காட்டப்படுகிறாள்.


எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய ஒரு பெண் பேராடுகிறாள், நித்திய கன்னி ஆகிய நாவல்களைப் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ளார். 


தலித் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளைக் குறித்து பாமா எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஒரு தலித் பெண்ணின் வாழ்வியல் பேராட்டத்தைக் பேசுகிறது.


கு.சின்னப்ப பாரதி எழுதிய 'சங்கம்' என்ற நாவல் மலைவாழ் பெண்களைச் சமூகம் எப்படி நடத்தியது என்பதைச் காட்டுகிறது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பி அளிக்க முடியாத வெள்ளையன், தன் மனைவி கருமாயியைக் கடன்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய கொடுமையைச் சங்கம் எனும் நாவல் காட்டுகிறது.

               

இராஜம்கிருஷ்ணனின் 'தனிமை'  

என்ற சிறுகதையில்  படிக்காத சென்ற தலைமுறைப் பெண் சந்தித்த பிரச்சனைகள் பற்றி ஒருவிதமாகவும் இன்று படித்த பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மற்றொரு விதமாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தை எதிர்த்து போராடும் போது பெண் தனிமைப்படுத்தப்படுவதையும்  சமூகத்தை மாற்ற முயலும் தொடர் நம்பிக்கை குறித்தும் இக்கதையில் கூறியுள்ளார். 


ஜோதிர்லதா கிரிஜாவின் 'அம்மாவின் அந்தரங்கம்' என்ற கதை பெண்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்தது போதும் என்பதைச் சொல்லிச் செல்கிறது. கணவன் தவறைப் பொறுத்துக் கொண்டு அடங்கி போக வேண்டும் என்பது கண்மூடித்தனமாக வழக்கம். கணவனின் நியாயமற்ற செயலை எதிர்த்து பெண்கள் குரல்கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இக்கதையின் மூலம் ஆசிரியர் கூறியுள்ளார். 


சுமதிரூபனின் 'அம்மா  இது என் உலகம்'   என்ற கதையில் விதவிதமான நகை, புடவை, கார் என்று வசதியுடன் பெண் இருந்தாலும் பெண்களுக்குச் சுயசிந்தனை , சுயமதிப்பு மிக முக்கியம் என்பதைக் கூறுவதாக இக்கதை உள்ளது. “புருஷனுக்காகச் சீலகட்டி ….. புருஷனுக்காக நகைபோட்டு அவனுக்காக சாப்பிட்டு அவனுக்காக சிரிச்சு அழுது தன்னைத் தொலைத்த அவலத்தை தாய் கூறியபோது”

இளையதலைமுறையாகிய ஆர்த்தி திருமணம் தன் தாயின் சுயத்தை அழித்துவிட்டதை உணர்வதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.


பாமாவின் 'பொன்னுத்தாயி' கதையில், பொன்னுத்தாயி படிக்காதவள் நான்கு பிள்ளைகளுக்குப் பிறகும் கணவன் குடித்துவிட்டு அவளை அடிக்கிறான். அவள் கூலியை அடித்து பிடுங்குகிறான். இது நாளும் தொடர்ந்த நிலையில் கணவனிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு வந்து சுயவியாபாரம் செய்து பிழைக்கிறாள் பொன்னுத்தாயி. தன்னை அடித்து இழுத்துப்போக வந்த கணவனை போலீசில் புகார் செய்கிறாள். கணவனே பிள்ளைகளை நீயோ வைத்து காப்பாற்று என்று கூற “பெத்தவதான் பிள்ளைகளை வளர்க்கனும்னு சட்டமா என்ன இங்கு கூட்டியறாத இனி நீ இந்த பக்கமே நீ தலயக்காட்டாத சொல்லிட்டேன் ஆமா“என்று கூறுகிறாள். இத்தொல்லைக்கு முற்றுப்புள்ளியாக தாலியை அறுத்து விடுகிறாள். அதிலுள்ள தங்கத்தை விற்று ஊருக்குள் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிளாள் என்று முற்போக்காக ஆசிரியர் கதையை முடித்துள்ளது கவனிக்கத்தக்கது. தனக்கான வாழ்வை தானே முடிவு செய்துகொண்டு வாழும் சுயசிந்தனையையும் இக்கதையில் பதிவு செய்துள்ளார்.


தமயந்தியின் 'விலங்களும் ஒரு விலாங்கு மீனும் ' என்ற கதையில், சித்ரா என்ற பெண் தான் விரும்பிய ஆணுடன் அவன் வீட்டிற்கு வந்து பார்க்கிறாள். அவன் வீடோ ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி இருப்பதைப் புரிந்து கொள்கிறாள். காதலுக்காக அடிமை வாழ்வை விரும்பாத அவள் அந்த வீடு தனக்கு சரியாக வராது என்பதை அறிந்து அவனை நிராகரிக்கிறாள். திருமணச் சந்தையில் இதுவரை பெண்கள் நிராகரிக்கப்பட்ட சூழலில் முதன்முதலாக ஆண் நிராகரிக்கப்பட்டதைக் கூறுவதிலிருந்து பெண்களின் சுயசிந்தனை, சுயதைரியம் இக்கதையை படிப்பவரால் அறிந்து கொள்ள முடியும்


மேற்கண்ட கதைகள் பெண்கள் உடலால் அடிமைப்பட்ட நிலையையும் காயம்பட்ட அனுபவத்தையும் கண்ணீரால் வெளிப்படுத்துவதையும் தவிர்த்து எந்த சூழலிலும் சுயம் இழத்தல் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் கணத்த சொல்லாடல்களில்  அற்புதமாக அமைந்துள்ளது.


சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள், செயலாற்றத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்புநிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர்.


 ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், யுக சந்தி,  ஆகிய நாவல்களின் கதைத் தலைவி கங்கா, பெண்ணுக்கு ஏற்படும் அனைத்துச் சிக்கல்களையும் அடைந்து இறுதியில் கங்கையில் மூழ்கி மறைகிறாள்.


ஜன்னலில் காத்திருந்தே வயதாகிப் போன முதிர்கன்னியின் வாழ்க்கைப் பார்வையை கூறும் ' 'நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்'  


வறுமையைப் பொருட்படுத்தாமல் கணவனின் அன்பே பெரிதென வாழும் "ராசா வந்துட்டாரு' கன்னியம்மா, 


ஐந்து வருடங்கள் பிரிந்திருந்த சகோதரனைக் கண்டதும் பாசத்தில் திக்குமுக்காடும் "மெளனம் ஒரு பாஷை' சுசீலா, 


தன் கணவனாகவே இருந்தாலும் அவனுடைய அந்தரத்தில் தலையிடுவது காட்டுமிராண்டித்தனம் என தன் மகனிடமே கூறும் "அந்தரங்கம் புனிதமானது' ரமணியம்மாள், 


உடல் வளர்ச்சிகளில் குறை இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் "குறைப்பிறவி' செல்வி,


காலங்காலமாக விதவைகளுக்கென சமூகம் விதித்து வைத்திருந்த கட்டுகளை உடைத்து வெளியேறும் "யுகசந்தி' கீதா, விதவைப் பேத்தியின் மறுமணத்துக்கு முழு மனதோடு ஒப்புதல் வழங்கும் ‘யுகசந்தி’யின் பழைய தலைமுறைப் பாட்டி,


தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப்  அவன் திருந்தி வாழ பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா,


ஜெயகாந்தன் அவர்களின் இப்படி எத்தனை எத்தனை பெண் பாத்திரங்கள்!  எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனை கனமான கதாபாத்திரங்கள்! அத்தனையும் அற்புதமான வார்ப்புகள்!


காலங்காலமாக, பெண்கள் தினம் தினம் எதிர் கொள்ளும் இக்கட்டான சூழலை மிகவும் அழுத்தமாக புதிய மாதவி அவர்கள் கீழ்கண்ட கவிதை வரிகளில் எடுத்துரைக்கிறார்.


" காலில் குத்திய எல்லா முட்களையும்

காலம் எடுத்துவிடுவதில்லை.

பயணங்கள் அதனால் 

நின்றுவிடுவதும் இல்லை.

 

விட்டுக்கொடுத்தல்,  

சகிப்புத்தன்மை,

சமரசமாதல்  .....  

இதெல்லாமாக

அவள்மீது   நீங்கள் எழுதி இருப்பது

வாழ்க்கைத்துணை நல சூத்திரங்கள்.


 அதில் எப்போதும் அவளைப்

 பூஜ்யமாகவே வைத்திருப்பதன் மூலம்

 உங்கள் எண்களும் 

 தங்கள் ‘மதிப்பீடுகளை’

 உறுதி செய்து கொள்கின்றன.


 ஆம்.

 யுகம் யுகமாக 

 அவள் கதைகளைவிட 

 அவளின்   நிஜங்களே 

 பயமுறுத்துகின்றன."


இன்றும் கூட தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் பெண்கள் இருப்பதை நாம் பல்வேறு செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

இத்தகைய சூழலை எதிர்த்து நின்று சுய சிந்தனையுடனும்,  பொருளாதார சுய சார்புடனும், தன்னம்பிக்கையுடனும், உங்கள் பயணம் தொடரட்டும்! 


மகளிர் தின வாழ்த்துக்கள்!


அன்புடன் 

திருமதி சரோஜினி கனகசபை 

Tuesday, March 18, 2025

 https://theekkathir.in/News/articles/power-loom/comrade-a.p.-palaniswami,-who-has-class-consciousness-and-political-conviction---v.-stalin

Monday, March 17, 2025

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

புத்தகங்கள் பேசுமா? ஏன் பேசாது நண்பர்களே?  என்னிடம் பேசிய நூல்கள் உங்களிடமும் பேசும் அல்லவா? 

என் மனதுடன் பேசிய நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின், என்னைக் கவர்ந்த 240 நூல்களுக்கான விமர்சனங்களை மூன்று நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளேன். என்னுடைய கீழ்க்கண்ட நூல்கள் புஸ்தகா பப்ளிகேஷனில் 25%தள்ளுபடியில் தற்போது கிடைக்கிறது. 

இந்த நூல் வாங்கலாம் - 

1.  பாகம் 1 & 2 

2. பாகம் 3 & 4

3. பாகம் 5 & 6

புஸ்தகா பப்ளிகேஷனின் இணைய தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்நூல் வெளிவந்துள்ளது. 

இந்த மூன்று நூல்களில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் நூல்கள் குறித்த விவரங்கள் கீழே

1. சாண்டில்யன் 

ராஜபேரிகை

சந்திரமதி 

2. இமையம் 

எங்கதெ

செடல்

மண் பாரம் 

3. கவிஞர் வைரமுத்து 

தண்ணீர் தேசம்

வில்லோடு வா நிலவே 

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்  மூன்றாம் உலகப்போர்

கருவாச்சி காவியம்

காவி நிறத்தில் ஒரு காதல்

4. ஜெயகாந்தன் 

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் பாரிசுக்குப் போ

யுக சந்தி

யாருக்காக அழுதான் 

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் உன்னை போல் ஒருவன் 

ரிஷிமூலம் 

காத்திருக்க ஒருத்தி 

பிரம்மோபதேசம் 

நந்தவனத்தில் ஒரு ஆண்டி 

புதிய வார்ப்புகள் 

தவறுகள் குற்றங்கள் அல்ல 

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி 

யுகசந்தி சிறுகதை தொகுப்பு 

நான் ஜன்னல் அருகே உட்கார்ந்து இருக்கிறேன் 

ஜெயகாந்தன் 20 சிறுகதை தொகுப்பு

5. வெ. இறையன்பு

ஏழாவது அறிவு மூன்று பாகங்கள், வாய்க்கால் மீன்கள் 

பத்தாயிரம் மைல் பயணம் 

காற்றில் கரையாத நினைவுகள் 

6. எஸ் ராமகிருஷ்ணன் 

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

துணையெழுத்து

ஒரு சிறிய விடுமுறை கால காதல் பகலின் சிறகுகள்

புத்தனாவது சுலபம்

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

குறத்தி முடுக்கின் கனவுகள் 

நூலக மனிதர்கள் 

சிறிய உண்மைகள் 

கேள்விக்குறி 

காண் என்றது இயற்கை 

உணவு யுத்தம் 

உருபசி 

பாஷோவின் ஜென் கவிதைகள் 

காந்தியோடு பேசுவேன் 

எனது இந்தியா 

நிமித்தம் 

கடவுளின் நாக்கு 

துயில் 

ரயில் பயணங்களின் தோழமை 

இலக்கற்ற பயணி 

அவளது வீடு சிறுகதை தொகுப்பு

7. புதுமைப்பித்தன்

காஞ்சனை 

8. நா பார்த்தசாரதி 

குறிஞ்சி மலர்

9. அகிலன் 

சித்திரப்பாவை

பால்மர காட்டினிலே

பெண் 

பாவை விளக்கு

அலை ஓசை 

சிவகாமியின் சபதம்

நெஞ்சின் அலைகள் 

அவளுக்கு 

10. ரமாதேவி ரத்னசாமி

பதினாறு வயதினிலே 

11. ஜெயமோகன் 

குகை

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபுகள்  வணங்கான் 

வெள்ளை யானை

யானை டாக்டர் 

நூறு நாற்காலிகள் 

காடு 

12. சுஜாதா 

எப்போதும் பெண்

தீண்டும் இன்பம்

பிரிவோம் சந்திப்போம்

ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

கற்றதும் பெற்றதும் 

ரத்தம் ஒரே நிறம் 

காந்தளூர் வசந்தகுமாரன் கதை 

ஆ.....

13. பிரபஞ்சன் 

மகாநதி

மரி என்கிற ஆட்டுக்குட்டி 

ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் 

பெண் 

மனிதர் தேவர் நரகர் 

இப்படியாக ஒரு சிநேகிதி 

14. தி ஜானகிராமன் 

முள்முடி

மோகமுள் 

15. பெருமாள் முருகன் 

கங்கணம்

பூக்குழி 

ஆலவாயன் 

மாதொருபாகன்

16. ஆயிஷா ஆர் நடராஜன் 

உலகப் பெண் விஞ்ஞானிகள் 

ஆயிஷா

17. மதன் 

கிமு கிபி 

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் வந்தார்கள் வென்றார்கள் 

18. G. சியாமளா கோபு 

அந்தப்புரத்தில் ஒரு நந்தவனம் 

மணி முடியும் உடைவாளும்

19.  ஜி நாகராஜன் 

நாளை மற்றொரு நாளே

20. நெய்வேலி பாரதி குமார் 

முற்று பெறாத மனு 

புத்தரின் பேராசை பல்

21. வண்ணதாசன் 

உயரப் பறத்தல்,  

ஒரு சிறு இசை 

22.வண்ண நிலவன் 

எஸ்தர்

ரெயினிஸ் ஐயர் தெரு 

23. வைக்கம் முகமது பஷீர்

மதில்கள் -  

24. ல.சா.ராமாமிர்தம்

அபிதா 

25. ருத்ரன் 

உறவுகள் 

26. தி. வள்ளியப்பன் 

சடகோவின் கொக்கு 

27. சிவசங்கரி 

புளியந்தளிர் 

பாலங்கள்

ஒரு சிங்கம் முயலாகிறது

28. பாலகுமாரன் 

அப்பம் வடை தயிர்சாதம்

தலையணை பூக்கள்

தாயுமானவன்

உடையார்  5 பாகங்கள் 

கடலோரக் குருவிகள் 

29. பாமா 

கருக்கு

மனுஷி 

30. நாஞ்சில்நாடன் 

தலைகீழ் விகிதங்கள்

சதுரங்க குதிரை

சூடிய பூ சூடற்க 

31. புதிய மாதவி 

சிறகொடிந்த வலசை 

பச்சைக் குதிரை 

ஐவருமாய் 

மஃபி

பெண் வழிபாடு 

ஐந்திணை

32. கமலதாஸ் 

என் கதை 

33. பொ. கருணாகர மூர்த்தி 

அனந்தியின் டயறி 

34. ஹெப்சிபா ஜேசுதாசன்

மானீ

புத்தம் வீடு  

35. ஆ மாதவன் 

தூவானம் 

36. சோ தர்மன் 

சூல்

கூகை 

37. எம் டி வாசுதேவன் நாயர் தமிழில் குறிஞ்சி வேலன் 

இரண்டாம் இடம்

38. சி ஜே ஷாஜகான் 

கனவுகள் காத்திருக்கின்றன 

39. இரா.முருகன்

திணை அல்லது சஞ்சீவினி

40. தஸ்தாயெவ்ஸ்கி 

வெண்ணிற இரவுகள் - தமிழில் கிருஷ்ணய்யா 

41. எஸ் எல் பைரப்பா 

பருவம் - தமிழில் பாவண்ணன் 

பிளவு - தமிழில் ஜெயா

 வெங்கட்ராம்

42. பா ராகவன் 

மூன்றெழுத்து

43. என் ராமகிருஷ்ணன் 

ஜென்னி காரல் மார்க்ஸ்

44. கு அழகிரிசாமி 

அன்பளிப்பு 

ராஜா வந்திருக்கிறார்

45. சுந்தர ராமசாமி 

ஜேஜே சில குறிப்புகள்

46. சு. ஆ வெங்கடசுப்புராய நாயகர்

சூறாவளி 

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை 

வாழ்வு இறப்பு வாழ்வு 

பெருந்தொற்று 

வீழ்ச்சி 

இல்லறவாசிகள்

47. எஸ் கிருஷ்ணன் 

சேர சோழ பாண்டிய பல்லவர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

48. கி ராஜநாராயணன் 

பெண் கதைகள்

49. இந்துமதி 

தொடுவான மனிதர்கள் 

விரலோடு வீணை 

தரையில் இறங்கும் விமானங்கள் 

50. அக்களூர் ரவி 

மகாராஜாவின் பயணங்கள்

51. கபிலன் வைரமுத்து 

அம்பறாத்தூணி

52. ஹென்றி ஒய்ட்ஹெட்  - வானதி 

தென்னிந்திய கிராம தெய்வங்கள்

53. கணேசகுமாரன் 

பித்து

54. தயாஜி 

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல 

பொம்மி கவிதைகள்

55. பிருந்தா சாரதி 

முக்கோண மனிதன் 

56. நாகரத்தினம் கிருஷ்ணா 

பிரான்ஸ் நிஜமும் நிழலும் 

சைக்கோன் புதுச்சேரி 

காஃப்காவின் நாய்க்குட்டி 

நீலக்கடல் 

ரணகளம் 

57. நிவேதா லூயிஸ் 

கலகப் புத்தகம்

58. கரிச்சான் குஞ்சு 

பசித்த மானுடம்

59. பாவண்ணன் 

சிதறல்கள் 

முள் 

பாய்மரக்கப்பல் 

பச்சைக் கிளிகள் 

என் வாழ்வில் புத்தகங்கள் 

60. சார்வாகன் 

கனவுக்கதை 

யானையின் சாவு

61. கலாப்ரியா 

மாக்காளை

வேனல்

62. மு மேத்தா 

சோழ நிலா

63. மு து பிரபாகரன் 

அடையாற்றுக்கரை

64. எம் கோபாலகிருஷ்ணன் 

மனை மாட்சி 

மணல் கடிகை

65. இந்திரா பார்த்தசாரதி 

குருதிப்புனல்

66. சித்தார்த்தன் சுந்தரம் 

செர்னோபிலின்குரல்கள்

67. பவா செல்லத்துரை 

சொல்வழி பயணம்

68. வாஸந்தி 

மூங்கில் பூக்கள்

69. அ. முத்துலிங்கம் 

குதிரைக்காரன் 

அமெரிக்கக்காரி 

பிள்ளை கடத்தல் காரன் 

70. தமிழ்ச்செல்வன் ரத்தன பாண்டியன் 

அசோகச் சக்ரா

71. பிரமிள்

சூரியன் தகித்த நிறம்

72. அழகிய பெரியவன் 

தேநீர் மேஜை கட்டுரைகள்

73. குட்டி ரேவதி 

விரல்கள்

74. கந்தர்வன் கதைகளின் தொகுப்பு 

75. யூமா வாசுகி 

ரத்த உறவு 

76. கண்மணி குணசேகரன் 

கோரை 

அஞ்சலை

77. சிரா 

சேரன் தலை கொண்ட வீரபாண்டியன் சோழச்சூரியன் பாகம் 1

78. ச சுப்பாராவ்

மீண்டெழும் மறு வாசிப்புகள் 

மதுரை போற்றுதும் 

சொற்களைத் தேடும் இடையறாத பயணம் 

79. அதிஷா 

சொல் அல்ல செயல்

80. பழனி பாரதி 

காற்றின் கையெழுத்து 

81. விட்டல் ராவ் 

கால வெளி 

கலை இலக்கிய சங்கதிகள் 

வண்ண முகங்கள்

82. உதயச்சந்திரன் 

மாபெரும் சபைதனில்

83. அகிலா 

அறவி

தவ்வை

84. தேவி பாரதி 

நீர்வழிப் படூஉம்

85. கண்ணன் 

நதி தொலைந்த கதை

86. ஜெயா நவி

விழுமம் 99

87. பூமணி 

கொம்மை

88. ஜெயந்தி சங்கர் 

மனப்பிரிகை 

வாழ்ந்து பார்க்கலாம் வா

89. ஆதவன் 

என் பெயர் ராமசேஷன்

90. உஷா சுப்ரமணியன் குறு நாவல்கள் 

91. வ கோகுலா

காக்கைச் சிறகினிலே பறவைகளின் வண்ணமயமான உலகம் 

92. ஜி ஏ பிரபா 

வேத வாழ்வில் பெண் குரல்

93. ராஜம் கிருஷ்ணன் 

சேற்றில் மனிதர்கள் 

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

94. தஞ்சை தவசி 

நிழலற்ற தூரம்

95. அம்பை 

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை தொகுப்பு

சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பு 

96. ரமணிச்சந்திரன் 

தொடுக்கோடுகள்

97. நா முத்துக்குமார் 

அணிலாடும் மூன்றில்

98. மோகனா சுகதேவ் 

நான்மாடக் கூடல் நாயகி 

பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

99. கமலா முரளி 

இந்துமதி கல்யாணம் எப்போ

100. மகாதேவன் 

லேடிஸ் ஸ்பெஷல் ரூட் நம்பர் 13

101. எம் வி வெங்கட்ராம் 

நமக்குள் இருக்கும் இருள் வெளி

102. யுவன் சந்திரசேகர் 

கடல் வற்றும் நாளில் மீன்கள் கால்களால் நடந்து போகும்

103. சுப்ர பாரதி மணியன் 

சப்பரம்

மேற்கண்ட நூல்கள் பிரிண்டெட் காப்பி வேண்டுவோர் புஸ்தகா பப்ளிகேஷன் / அமேசான் அல்லது என்னுடைய தொலைபேசி whatsapp 9790713509   எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் 

திருமதி சரோஜினி கனகசபை.






Thursday, February 2, 2023

வில்லோடு வா நிலவே

 நூல்: வில்லோடு வா நிலவே 

ஆசிரியர்: வைரமுத்து

 விலை:  ரூ. 200/-

வெளியீடு: சூர்யா லிட்டரேச்சர். 


இந்நாவலை பற்றி கவிஞர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர அரச குடும்பத்தில் வருணபேதம் வந்து புகுந்த வேளையில் அதை எதிர்த்தாடிய ஓர் இளைய சேரன் கதை! இதைக் கதையாகவும் வாசிக்கலாம், கவிதையாகவும் நேசிக்கலாம்”

என்கிறார். 


வரலாற்றில் தன்னை மிகவும் நெருடிய, கவர்ந்த ஓர் உண்மையை அடிப்படையாக வைத்து, கற்பனை கலந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் கவிஞர்.


சேரலாதன் பற்றிய அறிமுகமும், நற்செள்ளையின் வருணனையும், இருவருக்குமிடையேயான உரையாடல்கள் என திருப்பும் பக்கமெல்லாம் நம்மை அதன் போக்கில் ஈர்த்துக் கொள்ளும் நூல்.


 எடுத்துக் கொண்ட அனைத்து கதாப்பாத்திரங்களிலும் சரி், மடலேறுதல், போர் புரிதல், காதல் காட்சிகள், அரசியல் சூழ்ச்சிகள் போன்ற இடங்களிலும் சரி, தொடக்கம் முதல் முடிவு வரை வைரமுத்து அவர்களுக்கே உரித்தான எழுத்தாளுமையைக் கொண்டு , உரைநடையுடன் கூடிய கவிதையைக் கலந்து வாசிப்போரை கதைக் களத்திற்கே சென்று இரசிக்கும் படியாக காட்சிப்படுத்தியுள்ளார்.


மொழி, மண், இனம், நாகரீகம், காதல், காமம், சூழ்ச்சி, பண்பாடு, வரலாறு, வீரம், கொடை, நட்பு என புறநானூற்றில் வரும் ஒரு சில குறிப்புகளை வைத்து, வரலாற்றுக் கதையை வசீகரிக்கும் எழுத்துக்களால் நிரப்பியுள்ளார் இந்நூல் ஆசிரியர்.


சேரப்படைக்கும், கடம்பர்களுக்கும் ஏற்பட்ட போரில் வெற்றி பெற்றவர் யார்?, நச்செள்ளையின் குடும்பத்தினரின் மரணத்திற்கான பிண்ணனி மற்றும் சூழ்ச்சி என்ன?, நச்செள்ளை சேரலாதன் காதல் கைகூடியதா? வருணாசிரம விதிகளைத் தாண்டி நச்செள்ளையை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதா?, என்ற பல வினாக்களின் விடையாய் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட வரலாற்று நூல்தான் "வில்லோடு வா நிலவே".


வஞ்சியை ஆண்டுவரும் மாமன்னன் செங்குட்டுவனின் இளைய தம்பியும், தொண்டி நகரின் மன்னனுமான சேரலாதன் , சேரத்தளபதியும் தன் உயிர் நண்பனுமான உம்பற்காடன் மூலமாக, அழகின் மொத்த உருவமாக இருக்கும் நச்செள்ளை என்னும் கதை நாயகியை அறிகிறான்.


பெண்ணிய இலக்கணத்திற்கு அடையாளமாகவும், தாய், தந்தையின் கொடிய மரணத்திற்கு வஞ்சி அரசர்களை பழிதீர்க்கும் பண்புடன் கொல்லன் குடி மலையனாள் வளர்க்கப்பட்ட வீரமங்கை நச்செள்ளை. தமிழ் புலமையில் பெரும் திறமை பெற்று , அரசையும் அரச குலத்தையும் மட்டும் எக்காரணம் கொண்டும் பாடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  வரும் பாவை. 


நச்செள்ளை(காக்கைப் பாடினியார்) என்னும் தமிழ்ப் பேரழகியைக் காண சேரலாதன் , மன்னனாக அல்லாமல் சாதாரண குதிரை வீரனாக , வேட்டையின் போது அம்பாரியைத் தொலைத்து அதைப் பெறுவதைப் போல் கொல்லன்குடி மலையனின் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டவன், பெண்கவியான நச்செள்ளையை காண்கிறான். அவள் தோற்றத்தில் மயங்கி அவனையறியாமல் மனதைத் தொலைக்கிறான் சேரலாதன் 


அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தனது காதலை நச்செள்ளையிடம் வெளிப்படுத்துகிறான் சேரலாதன். ஒவ்வொரு முறையும் காதல் இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் சினம் கொண்டு மறுக்கிறாள் நச்செள்ளை.  மன போராட்டங்களுக்கிடையே நடப்பதறியாமல் தவிக்கும் நச்செள்ளை சேரலாதன் மடலேறுவதைக் கண்டு அண்ணணையும் எதிர்த்து காதலை ஏற்கிறாள். அடுத்த கனம் கண்முன்னே அண்ணன் மலையனின் தலை துண்டிப்பை காணும் அவலம். அதே சமயம் போருக்கு ஆயத்தமாக வேண்டிய சூழ்நிலை சேரலாதனுக்கு.


மறுபக்கம் அரச குலத்தில் பிறக்காத குலபெண் பட்டத்தரசியாக கூடாது என்பதற்காக அவளை கொல்ல எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்.  குலபெருமை அரசமரபு குலத்திற்கே இழுக்கு என அரசனையே பலிகொடுக்க நடக்கும் சூழ்ச்சியில் உயீர் தோழன் உம்பற்காடன்.. வில்களை மார்பில் தாங்கி மன்னனுக்காக உயிர் துறக்க.....


உயிரற்ற நண்பனின் உடலை சுமந்து அந்த உடலோடு தன் மணிமுடியையும் தன் அண்ணன் செங்குட்டுவனிடம் ஒப்படைத்து அரச பதவிகளை துறந்து காதல் மனைவி நச்செள்ளையுடன் கானகம் சேர்கிறான் மன்னன் சேரலாதன்.


கதை முழுவதும் அழகிய தமிழ்ச் சொற்றொடர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. அவற்றும் சில  ....


"நித்தம் விரிவடையும் சேர அரசின் பரப்பாய் எத்தனை அழகாய் விரிகிறது உன் சித்திரவிழி..."  


"தாய்மண் மீது அவ்வளவு பற்றா உங்களுக்கு ? " " என் தாயை தந்த மண் என்பதால் ஒரு மடங்கு பற்று. இந்தத் தமிழையும் தந்த மண் என்பதால் இரு மடங்கு பற்று !"


"பழுத்த பழங்களையும் வெடித்த மலர்களையும் அணில்களும் வண்டுகளும் அப்படியே விடுவதில்லை. அணிலுக்கு பழத்தின் மீது அன்பொன்றுமில்லை. வண்டுக்கு மலர் மீது வாஞ்சை ஒன்றுமில்லை. எப்படியேனும் குடிக்க வேண்டும்"    


"குவளைக் கண்கள்; வள்ளைக் காது;எட்பூ மூக்கு;செண்பகத் தோள்கள்; தாமரைத் தனங்கள்;முல்லைப் பற்கள்; காந்தள் விரல்கள்;"


"நீ என்னை கவிதை எழுதச் சொல்லும் கவிதை. எங்கே என் கவிதையே! ஒரு கவிதை சொல்."


"அவசரப்படாதீர்கள், மழைத்துளியை மறைத்து வைத்திருக்கும் மேகம்தான் இடியையும் எங்கோ ஒளித்து வைத்திருக்கிறது."


"நெருப்பு என்பது வைத்தவுடன் பற்றிக்கொள்கிறது. கண்ணீர் என்பது பார்த்தவுடன் தொற்றிக்கொள்கிறது."


எல்லா மீறல்களும் குற்றங்கள் அல்ல. மழைத்துளிகள் மேகத்தை மீறினால் பூமிக்கு நன்மை என்று பொருள்.


"இந்தக் காதல் வயப்பட்டவனுக்கெல்லாம் மொழி எப்படியோ வயப்பட்டு விடுகிறது அறிவு வயப்படுவதில்லை."


"தொண்டி கடற்கரையின் அலைகள் கிளிஞ்சல்களை தூக்கி எறிவது போல் நான் அரச பதவியை இங்கே இப்போதே கழற்றி எறிகிறேன்."


நிச்சயம் படியுங்கள். தமிழின் சுவை நூலெங்கும் சிதறி கிடக்கிறது.

Monday, March 14, 2022

மனம், மனிதன், சமூகம் - டாக்டர்

 மனிதர்கள் மிகவும் சுயநலம் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா?என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.

 கவலைகளும்,துயரங்களும் மனித வாழ்க்கையில் புதிதானதோ, அரிதானதோ இல்லை. அது எதிர்கொள்ளும் நம்பிக்கையை இன்னொரு மனிதன் வழங்குவான் என்ற நம்பிக்கையில் தான் நாம் அத்தனையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

 அந்த நம்பிக்கையையும் பாதுகாப்பையும் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயம் உணரத்தான் வேண்டும்.

 தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நமது வாழ்க்கையும் கூட ஒரு இயந்திரமயமாகி விட்டது போலத்தான் இருக்கிறது.

 தனிமை மீது ஒரு மனிதருக்கு இருந்த அச்சங்களும் ,வருத்தங்களும் மாறிப்போய் தனிமை மீது அத்தனை விருப்பத்துடனும் எதிர்பார்ப்புடன் இருக்கும் மனிதர்களை கொண்ட காலகட்டம் இது.

 செல்லும் இடமெல்லாம் மனிதர்கள் தனித்தனியாகவே அமர்ந்திருக்கிறார்கள் ,தனித்தனியாக பாட்டு கேட்கிறார்கள், தனித்தனியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாகவே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரு ஆழமான உறவே இங்கு யாருக்கும் யாருடன் இல்லையோ? என்று தோன்றுகிறது. ஒரு உறவின் மீது இயல்பாகவே வரக்கூடிய ஒரு பொறுப்புணர்வு அர்ப்பணிப்பு புரிதலும் யாருக்குமே இல்லை.

தன்னை தவிர தனது விருப்பங்களை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைப்பதும் விளைவுகள் தான் இத்தனை முதிர்ச்சியற்ற உறவுகளும் அதன் நிமித்தம் வரும் சிக்கல்களும்.

இந்த வாழ்க்கை என்பது அப்படி சுய நலமாக வாழ முடிவதில்லை.நம்மீது பிரியத்துடன் உள்ளார்ந்த அன்புடன் இருக்கும் மனிதர்களை தவிர நாம் வேறு எதையும் பெரிதாக சம்பாதிப்பதற்கு இங்கு வரவில்லை.

 நம்மை நெருங்கி இருக்கும் ஒரு மனிதர் கொடுக்கும் நம்பிக்கையால் மட்டுமே இந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 எந்த அளவிற்கு அன்பையும் ,காதலையும் நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அப்படியே முழுமையாக நாமும் இருக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் அல்ல,உங்களது உடல் மொழியால் துயரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவருக்கு நினைவூட்டுவது அவசியம்.வெற்று அறிவுரைகளை விட உங்கள் உடல்மொழி அத்தனை முக்கியமானது.

 மீளா துயரில் இருக்கும் ஒருவரை நோக்கி நீளும் உங்கள் கரங்களை விட இந்த உலகத்தில் புனிதமானது வேறொன்றுமில்லை.

புத்தகம்:     மனம் ,மனிதன், சமூகம்

 ஆசிரியர்:  டாக்டர் சிவபாலன் 

Wednesday, March 9, 2022

பெண்மை

 பெண்மை  - எஸ்.ராமகிருஷ்ணன்


''மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டுக்கு வேலை பார்க்க வந்த சிறுமியிடம், அந்த வீட்டின் உரிமையாளரான தாத்தாவும் பாட்டியும், 'நீ குடியிருக்கும் குடிசைப் பகுதியில் ஒரு சிறுமிக்கு ஒரு நாயை திருமணம் செய்து வைத்துள்ளார்களே, இது கேவலமாக இல்லையா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள். 'அப்படிச் செய்தால் என்ன தப்பு’ என்று அந்தப் பெண் கேட்டாள். '18 வயதுக்குள் திருமணம் செய்வது சட்டப்பூர்வமாக தப்பு’ என்று சொன்னார்கள். 'மனிதனைத் திருமணம் செய்தால்தான் தப்பு. நாயைத் திருமணம் செய்தால் தப்பில்லை. நாயைத் திருமணம் செய்தது நல்லதுன்னுதான் சொல்வேன். நாய் ஒருநாளும் குடித்துவிட்டு வராது. என்ன சமைத்துப்போட்டாலும் சாப்பிடும். அதை, இதை சமைத்துப்போடு என்று சொல்லாது. அதற்குச் சாப்பாடு போட்டால் விசுவாசத்தோடும் நன்றியோடும் இருக்கும். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே!


படித்தவர்களுக்கு நாங்கள் செய்வது தவறாகத் தெரியும். மழை வருவதற்காக எங்கள் பகுதியில் செய்யப்பட்ட சடங்கு அது. அதைத்தான் பேப்பரில் கல்யாணம்னு போட்டிருக்கிறார்கள. இந்தியாவில் நடக்கும் சடங்குகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான், அது நிஜமில்லை. செய்தால் என்ன தவறு என்று பெண்களை யோசிக்க வைக்கின்ற சமூகமாக இந்தியா இருக்கிறதென்றால், அதற்கு ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டியதே தவிர, பெண்கள் அல்ல..!’ என்று சொன்னாள் அந்தப் பெண். அந்தத் தாத்தாவும் பாட்டியும் அமைதியாகிவிட்டார்கள்.


பெண்கள் கல்வியிலும், அறிவிலும் இயற்கையாகவே மேலோங்கி இருந்தார்கள். 'பாஸ்கரா’ என்ற கணிதமேதை இருந்தார். அவர் மகள் பெயரில் புத்தகம் எழுதியிருந்தார். புத்தகத்தின் பெயர் 'லீலாவதி.’ லீலாவதி கேட்ட கேள்விகளையும் பதில்களையும்தான் அவர் புத்தகமாக வெளியிட்டார். அறிவிலும், கணிதத்திலும் உயர்ந்த ஞானம்பெற்ற பெண்ணாக இருந்தாள் லீலாவதி. அப்படிப்பட்ட பெண்ணுக்கு அந்தக் காலத்தில் புத்தகம் எழுத அனுமதியில்லை என்பதால் பாஸ்கராவே அந்தப் புத்தகத்தை எழுதினார். புத்தகத்தை வெளியிடத் தடை போட்டார்கள். 'கணித சூத்திரம்’ என்றுதான் வெளியிட வேண்டும். உன்னுடைய பெண்ணின் பெயரில் வெளியிடக் கூடாது. 'கணிதத்தில் சிறந்தவள்’ என்ற அடையாளமே இருக்கக் கூடாது’ என்று சொன்னார்கள். எங்கே இந்த இந்திய சமூகம் லீலாவதியை அங்கீகரித்துவிடும் என்பதற்காக இன்னொரு மாபெரும் வேலையைச் செய்தார்கள். அந்தப் பெண்ணுக்கு ஜாதக தோஷம், திருமணமே நடக்காது. அதனால் ஏங்கிப்போன மகளுக்கு ஆறுதலாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்று ஒரு கட்டுக்கதையைச் சொன்னார்கள். ஒரு பெண்ணுக்கு ஜாதக தோஷம் என்று சொல்லிவிட்டால் அத்தனை அறிவும் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. ஏன் இந்திய சமூகம் பெண்ணை, ஓர் அடிமைத்தனமாக வீட்டுக் கணக்கு, பால் கணக்கு எழுத வைத்திருக்கிறது. இந்தியப் பண்பாடு பெண்ணைக் கண்காணிப்பதிலும் அடக்குமுறைபடுத்துவதிலும் அறிவை மட்டுப்படுத்துவதிலும்தான் இருக்கிறது.


பெண்கள் சுடிதார் அணிந்திருக்கிறீர்கள். இந்த உடையை முதன்முதலில் அணிந்த பெண் யார் தெரியுமா? அதுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை நான் தேடிப் பார்க்கும்போது ஆச்சர்யமான உண்மை இருந்தது. அந்தப் பெண் ஔரங்கசீப்பின் மகள் ஜாஃபர்நிஷா. அவள்தான் சுடிதாரை முதன்முதலில் அணிந்தாள். குதிரை ஏற ஆசைப்பட்டாள் ஜாஃபர்நிஷா. தினமும் காலை குதிரை ஏறும்போது, குதிரையின் இரண்டு பக்கங்களிலும் கால்போட்டு உட்கார வேண்டும். குதிரையில் போகும்போது முகத்திலும், மார்பிலும் காற்று வீசும். முகத்தை மூடிகொள்வதற்காக துப்பட்டா அணிந்தாள். அந்த இரட்டை ஆடையைத்தான் நீங்கள் இப்போது அணிந்திருக்கிறீர்கள். அப்போது ஔரங்கசீப் சொன்னார், 'பெண்கள் ஆடை அணிவது அவர்களது செளகரியத்தைப் பொறுத்துத்தானே தவிர, பண்பாட்டை, கலாசாரத்தை ஒத்தது அல்ல..!’ என்று.


சுடிதார் ஜாஃபர்நிஷாவுக்கு எங்கேயிருந்து வந்தது? ரஷ்யாவில் வணிகம் செய்யக்கூடிய ரஷ்ய பெண்கள், வெளியூர் செல்லும்போது நிறைய ஆடைகளை எடுத்துப்போக முடியாததால் சுடிதாரை அணிந்தார்கள். ரஷ்யர்களிடமிருந்து ஔரங்கசீப் மகளுக்கு வந்தது. பின்னர், டெல்லிக்கு வந்து ஒவ்வோர் மாநிலமாகக் கடந்து தமிழ்நாட்டுக்கும் வந்தது. ஓர் ஆடைக்குப் பின்னால்கூட இந்தியாவில் பெரிய வரலாறு இருக்கிறது.


100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கு ஒரு பெண் மருத்துவர்கூட கிடையாது. ஆண் மருத்துவர்கள்தான் இருந்தார்கள். மருத்துவர்கள் இல்லாமல் கிராமத்தில் பெண் மருத்துவச்சிகள் மூலம் மருத்துவம் பார்க்கப்பட்டு நிறைய பெண்கள் இறந்துபோயிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண் தனியாக பள்ளியில் படித்து, தனியாகத் தேர்வு எழுதி 15 பேரில் தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. முத்துலெட்சுமி வகுப்பறைக்குப் போனால், 'இந்தப் பெண் டாக்டராகி என்ன செய்யப் போகிறாள், இவளுக்கு எதுவுமே கற்றுத்தராதீர்கள்’ என்று சொல்லி எதுவுமே கற்றுத்தர மாட்டார்கள். ஆனால் முத்துலெட்சுமி, வீட்டிலும் நூலகத்திலும் புத்தகங்களைப் படித்து அறுவைச் சிகிச்சை பாடத்தில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கோல்டு மெடல் வாங்கினார். கஷ்டப்பட்டு படித்து டாக்டராகிய முத்துலெட்சுமியை மருத்துவம் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். பெண்ணிடம் வைத்தியம் பார்ப்பதா என்று ஏளனம் பேசினார்கள். ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கலாமே என்று அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார்.


இவரிடம் மருத்துவம் பார்க்க வரும் பெண்கள் முக்காடு போட்டுத்தான் வருவார்கள். மருத்துவரிடம் போவதே தெரியக் கூடாது. அதுவும் பெண் மருத்துவரிடம் போவது தவறு என்று கருதினார்கள். அதன் பிறகு சென்னை சட்டமன்ற உறுப்பினராகி தேவதாசி முறையை ஒழித்தார். பெண் கல்வியை சட்டமாக்கினார். பெண் சுதந்திரத்துக்குப் பாடுபட்டார். நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இவருடைய வாழ்க்கையைத்தான்!''

Tuesday, January 25, 2022

மனம் மனிதன் சமூகம் - டாக்டர் சிவபாலன்

 மனிதர்கள் மிகவும் சுயநலம் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா?என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.


 கவலைகளும்,துயரங்களும் மனித வாழ்க்கையில் புதிதானதோ, அரிதானதோ இல்லை. அது எதிர்கொள்ளும் நம்பிக்கையை இன்னொரு மனிதன் வழங்குவான் என்ற நம்பிக்கையில் தான் நாம் அத்தனையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.


 அந்த நம்பிக்கையையும் பாதுகாப்பையும் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயம் உணரத்தான் வேண்டும்.


 தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நமது வாழ்க்கையும் கூட ஒரு இயந்திரமயமாகி விட்டது போலத்தான் இருக்கிறது.


 தனிமை மீது ஒரு மனிதருக்கு இருந்த அச்சங்களும் ,வருத்தங்களும் மாறிப்போய் தனிமை மீது அத்தனை விருப்பத்துடனும் எதிர்பார்ப்புடன் இருக்கும் மனிதர்களை கொண்ட காலகட்டம் இது.


 செல்லும் இடமெல்லாம் மனிதர்கள் தனித்தனியாகவே அமர்ந்திருக்கிறார்கள் ,தனித்தனியாக பாட்டு கேட்கிறார்கள், தனித்தனியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாகவே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


 ஒரு ஆழமான உறவே இங்கு யாருக்கும் யாருடன் இல்லையோ? என்று தோன்றுகிறது. ஒரு உறவின் மீது இயல்பாகவே வரக்கூடிய ஒரு பொறுப்புணர்வு அர்ப்பணிப்பு புரிதலும் யாருக்குமே இல்லை.


தன்னை தவிர தனது விருப்பங்களை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைப்பதும் விளைவுகள் தான் இத்தனை முதிர்ச்சியற்ற உறவுகளும் அதன் நிமித்தம் வரும் சிக்கல்களும்.


இந்த வாழ்க்கை என்பது அப்படி சுய நலமாக வாழ முடிவதில்லை.நம்மீது பிரியத்துடன் உள்ளார்ந்த அன்புடன் இருக்கும் மனிதர்களை தவிர நாம் வேறு எதையும் பெரிதாக சம்பாதிப்பதற்கு இங்கு வரவில்லை.


 நம்மை நெருங்கி இருக்கும் ஒரு மனிதர் கொடுக்கும் நம்பிக்கையால் மட்டுமே இந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். எந்த அளவிற்கு அன்பையும் ,காதலையும் நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அப்படியே முழுமையாக நாமும் இருக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் அல்ல,உங்களது உடல் மொழியால் துயரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவருக்கு நினைவூட்டுவது அவசியம்.வெற்று அறிவுரைகளை விட உங்கள் உடல்மொழி அத்தனை முக்கியமானது.


 மீளா துயரில் இருக்கும் ஒருவரை நோக்கி நீளும் உங்கள் கரங்களை விட இந்த உலகத்தில் புனிதமானது வேறொன்றுமில்லை.


புத்தகம்:மனம் ,மனிதன், சமூகம் ஆசிரியர்:டாக்டர் சிவபாலன் இளங்கோவன்

Friday, January 21, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள்  - எஸ் ராமகிருஷ்ணன்


பகுதி 25   - காஃப்காவின் எலி


 இப்பகுதியில் என்னைக் கவர்ந்த  சில பகுதிகள் 

 

பால்ய வயதில் உலகம் மிகப் பெரியதாக இருந்தது வீதி மிகப்பெரியதாக இருந்தது மரங்கள் மிக உயரமாக இருந்தன அடிவானம் மிகத்தொலைவில் இருந்தது பெரியவர்களின் செருப்பு கூட மிகப்பெரியதாக தோன்றியது நண்பர்கள் ஒன்று சேர்ந்து குளிக்கப் போனால் கண்மாய் கூட பெரிய கடலை போல் தோற்றமளிக்கும் சிறிய தட்டில் உண்டு சிறிய உடைகள் உடுத்தி சிறிய தலையணையில் உறங்கி எழுவோம் ஆனால் இன்று   இதைக் கண்டா பிரமித்தேன் ? என்று அந்தக் காட்சி சுருங்கிப் போய் விடுகின்றது


 உலகம் முழுவதும் பல்லாயிரம் பக்கங்கள் பால்ய வயதின் நினைவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கின்றன அவை திரும்ப திரும்ப வாசிக்க படுவதற்கான காரணம் பால்ய வயதின் காட்சிகள் அனுபவங்கள் உணர்வுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம் அல்லது இன்றைய உலகை புரிந்து கொள்கிறோம் என்பதே என்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகின்றார்


என்னுடைய சிறுவயதில் நானும் என் தம்பியும் வளர்ந்தது அம்மாச்சியின் வீட்டில்தான் அப்போது அந்த வீடு மிகப்பெரியதாக காட்சியளித்தது அங்கிருந்த மர மேஜை மிகப் பெரிதாக தோன்றியது ரெண்டு பேரும் ஒரே மேஜையில் உட்கார்ந்து எழுதுவோம் ஆனால் இன்று பார்க்கும்போது அது எவ்வளவு சிறிய மேஜை அந்த வீடு அவ்வளவு பெரிய வீடு அல்ல என்று தோன்றுகிறது உண்மையில் ஆசிரியர் இங்கு ஆச்சரியப் பட்டதில் வியப்பில்லை இத்தகைய வியப்பு நம்மில் நிறைய பேருக்கு ஏற்படும் நாங்கள் விளையாடிய அந்த மொட்டைமாடி கூட மிகச் சிறியதுதான் ஆனால் அன்று அது மிகப்பெரியதாக தோன்றியது


உலகம் மாறவில்லை ஆனால் நாம் வளர்ந்தவுடன் உலகம் வேறு தோற்றம் கொண்டு விடுகிறது எப்போது உலகம் மாறுகிறது ?எவ்விதம் மாறுகிறது ?அந்த மாற்றத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் ?


காகிதம் மடங்கி கொள்வது போல நாம் பல நேரங்களில் மடங்கி கொண்டு விடுகிறோம் காவலர் உங்களை சாலையில் நிறுத்தி மிரட்டும் குரலில் கேள்விகள் கேட்டால் உடனே மடங்கி போய் விடுகிறீர்கள் அதிகாரிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தினால் நீங்கள் மடங்கிப் போய் விடுகிறீர்கள் மகனோ மகளோ உங்கள் விருப்பத்தை மீறி செயல்பட்டால் உடனே மடங்கிப் போய் விடுகிறீர்கள் இப்படி ஓராயிரம் முறை மனிதர்கள் அடங்கிப் போகிறார்கள் 


சூழலின் முன்பு ஒரு மனிதன் மடங்கிக் கொள்ளும் போது அவ்வளவு தான் தன்னால் செய்ய முடியும் என்று நம்புகிறான் ஆனால் சில காலம் சென்ற பிறகு தான் ஏன் அப்படி மடங்கி போனோம் என்று நினைத்து நினைத்து துயரம் அடைகிறான் 


பெண்களில் பலர் இந்த துயரத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார் இது மிகவும் எதார்த்தமான உண்மை. 


சூழ்நிலை தரும் அழுத்தமும் நெருக்கடியும் ஒவ்வொருநாளும் மனிதர்களை இப்படி மடங்கிக் கொண்டே இருக்கிறது சிலரை மண்டியிடச் செய்கிறது சிலரை தனித்து அழ வைக்கிறது சிலரை மௌனமாக ஓடச் செய்கிறது  இதிலிருந்து எவரும் தப்ப முடியாது


பகுதி 28  -  தன்னை இழந்தவர்கள்


லாக் டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாட தொடங்கினார் ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி விடவே இரவு பதினோரு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார் மகனுக்கோ மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டு விடுவார் அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டி இருந்தது


 லாக் டவுன் என்பதால் அவர் அலுவலகம் போகவில்லை வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டே இருந்தார் அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பிப் போனார் அங்கு பூர்வீக வீட்டில் ஆட்கள் நிறைய  இருந்ததால் விளையாடிக் கொண்டே இருந்தார் இப்படி விடாது விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்துகொண்டு கேரம் போர்டு தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்


லாக் டவுன் நண்பரை செயல் அற்றவராக மாற்றியிருந்தது அலுவலகம் அதிகாரம் பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னைவிட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை வேகத்தை காட்டத் துவங்கிவிட்டார்


பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இதுபோன்ற புதிய மன நெருக்கடிகளை லாக்டோன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள் 


சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டு இருக்கிறார்கள் சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கை கால் வலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து இருக்கிறார்கள் சிலருக்கு இரவில் உறக்கம் வரவே இல்லை சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள் ஒரு சிலர் புதிய கலைகளை கற்றுக்கொள்ள முயன்று இருக்கிறார்கள் தோட்ட வேலைகள் மீன் வளர்ப்பது பொம்மை செய்வது சமைக்க கற்றுக் கொள்வது என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில்தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது 


நானும் இந்த  லாக் டவுன் இல் நிறைய கற்றுக்கொள்ள தொடங்கினேன் என்னிடம் உள்ள 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து அதன் சுருக்கத்தை எழுத ஆரம்பித்தேன் ஏதேனும் ஒரு வகையில் இந்த  லாக் டவுன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்


பகுதி 29  -   தனிமையும் கனவுகளும்


எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் கசெளளி இல் பிறந்தவர் இவர் ஒரு நேர்காணலில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாக சொல்கிறார் 


திப்பு சுல்தான் தனது கனவுகளை இதுபோல தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்து இருக்கிறார் அவை தனி நூலாக வெளிவந்துள்ளன


 ரஸ்கின் பாண்ட்யிற்க்கு முப்பதாவது வயதில் காமன்வெல்த் பரிசு கிடைத்துள்ளது குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது சுவாரசியமானது அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை

 

 ஒருமுறை பள்ளி ஒன்றுக்கு சிறப்பு ஆசிரியராக ஒரே ஒரு வகுப்பு எடுக்க அவரை  அழைத்திருக்கிறார்கள்  மாணவர்களின் விளையாட்டுத் தனத்தைனையும் குறும்ப்பினையும் கண்டிக்க மனம் இன்றி சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார் சிறுவர்களின் விளையாட்டுத் தனத்தை கண்டிக்க முடியாது அது அவர்களின் உற்சாக மனதின் வெளிப்பாடு அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்டின் இந்த மனநிலைதான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கிய காரணி என்று ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகிறார்


சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றி கவலைப்படாமல் வாசிக்கிறார்கள் அர்த்தங்களை முழுமையாக புரிந்து கொள்வது மிக  அபூர்வமாகவே காணப்படுகிறது  நிகழ்வுகளின் சுவாரஸ்யமும்  விநோதமும் அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது


ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய 20 வயதில் அவனுக்கு பொருந்துவதில்லை ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு 80 வயது ஆகும் போதும் பிடித்தமானதாக இருக்கிறது கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது அதுதான் நல்ல புத்தகத்தின் அடையாளம் என்று ஆசிரியர் விளக்குகிறார்


பகுதி 30  -  எழுதும் நாட்களில்


 ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு பெற்ற பின்பு தான் எழுதப்போவதில்லை தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுக்கிறார் 

 

பத்திரிகையாளர்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கின்றனர் அதற்கு அவர் சொல்கிறார் என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரே ஒரு காரணம் இருந்தது அது என் மகன்  ஹிக்காரி மூளை வளர்ச்சியற்ற அவன் நலம் அடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன் அந்தப் பணியை சரியாக செய்து விட்டதாக உணர்கிறேன் ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று கூறுகிறார் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அறிந்தால் இந்தப்பதிவு எவ்வளவு நிஜமானது என்பதை உணர முடியும்


 கென்ஸாபுரோ ஒயி  மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஹிக்காரி என்று பெயர் வைக்கிறார் அதன் பொருள் வெளிச்சம் 

 

அவன் குழந்தையாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதை செய்யாவிட்டால் உயிர் வாழ முடியாது அப்படியே செய்தாலும் அவன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிறார் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்று மருத்துவரிடம் கென்ஸாபுரோ ஒயி கேட்கிறார் ஆனால் மருத்துவர் அவன் உங்களுக்கு வீண் சுமை போல் ஆகிவிடுவான் என்று கூறுகிறார்

 

 பின்னர் அவரும் அவரது மனைவியும் ஹிக்காரி யை தாங்களே கவனித்து வளர்ப்பதாக முடிவு எடுக்கின்றனர் நிறைய கவனம் எடுத்துக் கொள்கின்றனர் அவனை மீட்டெடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர்


தன் மனைவியின் உறுதியான நிதானமான இடைவிடாத செயல்பாடும் ஆழ்ந்த நம்பிக்கையுமே தன் மகனை மீட்டெடுத்தது என்கிறார் 


பேச்சு வராத ஹிக்காரிக்கு ஆர்வம் உருவாக்குவதற்காக விதவிதமான பறவைகளின் குரலை கொண்ட ஒலிநாடாக்கள் ஐ வீட்டில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள் அவன் பறவைகளின் குரல் வழியாகவே உலகை அறிந்திருக்கிறான் பறவைகளின் குரலைக் கேட்கும் போது அவன் சந்தோஷம் அடைவான் ஆனால் எந்த எதிர்வினையும் தரமாட்டான் இப்படி நாள்தோறும் புதுப்புது பறவைகளின் ஒலியை வீட்டில் ஒலிக்க செய்திருக்கிறார் ஒவ்வொரு நாளும் தன் மகனின் மௌனம் தங்கள் மீது பெரும் பாரமாக இறங்கியது என்று கூறுகிறார் பல இரவுகள் அழுது இருப்பதாக சொல்கிறார் 


வேதனைதான் எழுத்தின் மூல ஊற்று  உலகம் அறியாத தந்தையின் கண்ணீர் தான் எழுத்தாக மாறி நோபல்பரிசு வரையான அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறது


ஆறு வயதான மகனை அழைத்துக்கொண்டு கென்ஸாபுரோ ஒரு நாள் காட்டிற்குள் சென்றார் அங்கே ஒரு பறவையின் குரலைக் கேட்டு எதிர்வினை தரும் விதமாக ஹிக்காரி நீர்க்கோழி என்ற முதல் வார்த்தையை பேசினான் அந்த மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது என்கிறார் தன் மகனின் மீட்சிக்கான நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவே தனது எழுத்து மாறியது ஆகவே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குணப்படுத்துதல் இது என் மகனை மட்டுமல்ல அவனைப்போல தனிக்கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒரு தந்தைக்கு தாய்க்கு உதவி செய்யும் என்று நம்பினேன் அதுதான் நடந்தது என்கிறார் 


பத்து வயதானபோது மொசார்ட், பீத்தோவன் என உலக புகழ்பெற்ற இசை மேதைகளின் இசையை கென்ஸாபுரோ அறிமுகம் செய்திருக்கிறார் மொசார்ட்தடின் எந்த இசைத் துணுக்கை கேட்டாலும் அவன் அது எந்த இசைக்கோர்வை என்று சொல்லிவிடுவான் வளர்ந்து பெரியவனாகி இன்று அவன் ஒரு இசையமைப்பாளராக ஆகி இருக்கிறான் அவனது இசைத்தட்டுகள் பல லட்சம் விற்பனையாகி சாதனை செய்திருக்கிறது


சிறப்பு கவனம் எடுக்க வேண்டிய குழந்தைகளை உலகம் ஏன் புறக்கணிக்கிறது?அவமதிக்கிறது? புரிந்து கொள்ள மறுக்கிறது ?அந்தப் பெற்றோர்களின் அடக்கப்பட்ட கண்ணீரை மனத்துயரை புரிந்துகொள்ளாமல் ஏன் பரிகாசம் செய்கிறார்கள்? இந்த உலகில் மன்னிக்க முடியாத குற்றம் இதுபோன்ற பெற்றோர்களை அவமதிப்பதாகும் என்று ஆசிரியர் விளக்குகிறார் உண்மைதானே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே. 


சிறப்பு கவனம் வேண்டுகிற குழந்தைகளின் மௌனம் என்பது தனித்துவமான மொழி அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளை சரியாக வளர்கிறார்கள் உருவாக்குகிறார்கள் நோயிலிருந்து குணப்படுத்த மருத்துவம் மட்டுமே உதவி செய்வதில்லை இயற்கையின் வழியிலும் நம்பிக்கையான சொற்களின் மூலம் மீட்சியை உருவாக்க முடியும் என்கிறார்


 இதில் இந்த கதையை படிக்கும்போது அந்தத் தாய் தந்தையரின் மனோநிலை நம் கண்முன் வந்து செல்கிறது அவர்கள் எடுத்த அறிவுப்பூர்வமான முடிவுகள் செயல்பாடுகள் நம்மை நெகிழ வைக்கிறது 

 

ஒவ்வொரு குழந்தைகளின் வளர்ப்பிலும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் அவர்களுடைய தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாட்டினை பார்த்துதான் குழந்தைகள் வளர்கின்றனர் இன்றைய குழந்தைகள் நம்முடைய வருங்கால நாட்டின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உயர வேண்டும்


தொடரும்


நன்றி 


தோழமையுடன் 


சரோஜினி கனகசபை





Tuesday, January 18, 2022

சிறிய உண்மைகள்

  சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்

 

 பகுதி 7  - ஆயிரம் நன்றிகள்

யாசுனாரி கவாபத்தா Thank You என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார்  

இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.


இக்கதையில் ஒரு பேருந்து ஓட்டுனரின் பயணத்தில் தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்  அவருடைய உயர்ந்த செயலை ச குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் 


பேருந்து ஓட்டுனர் தன்னை கடந்து செல்லும் குதிரை வண்டிகள் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்கிறார் உண்மையான மகிழ்ச்சியோடு அவர் தனக்காக வழிவிடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்கிறார் மலைப்பாதையில் எதிரே வரும் குதிரைகளுக்கு தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்த கூடும் என்பதால் குதிரை வண்டியை கடந்துபோகும் அவர் விளக்குகளை அணைத்து விடுகிறார் மேலும் அந்த குதிரை வண்டி ஓட்டும்  நபருக்கும் நன்றி சொல்கிறார் 35 மைல் செல்லும் அந்த பயணத்தில் அவர் ஒரு நூறு முறை நன்றி சொல்லி விடுகிறார்


நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நமக்கு சிறு வயதில் வீட்டில் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் அது மனதில் பதியாது வாழ்க்கைதான் நன்றியின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது என்கிறார் ஆசிரியர்


நம் குழந்தைகளுக்கு நாம் தவறு செய்யும்போது Sorry  சொல்லும் பழக்கத்தையும் பிறர் செய்யும் உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனும் பழக்கத்தையும் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் சில குழந்தைகள் தான் என்ன தவறு செய்திருந்தாலும் Sorry எனும் வார்த்தையை தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்வதில்லை ஆனால் இதனை கண்டிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்த வேண்டும் 


ஜப்பானின் இயல்பு வாழ்க்கையில் நன்றி சொல்லுதல் கலந்திருக்கிறது ஒரு நாளில் எத்தனை முறை நன்றி சொல்வார்கள் என்ற கணக்கே இல்லை மனிதர்களுக்கு மட்டும் இல்லை இயற்கைக்கும் ஜப்பானியர்கள் நன்றி சொல்கிறார்கள் இயற்கை மனிதர்களை மகிழ்வித்து கொண்டே இருக்கிறது  அதை மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை அரிதாகவே உணர்ந்து கொள்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார் 


பேருந்து ஓட்டுநருக்கு பெயரே இல்லை ஒருவேளை புத்தர் அந்தப் பேருந்தின் சாரதியாக  இருந்திருந்தால்  இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என்கிறார் திரு ராமகிருஷ்ணன் அவர்கள்


பகுதி 16  - மகிழ்ச்சியின் தூதுவன்


இப்பகுதியில் ஆசிரியர் தபால்காரர் களையே மகிழ்ச்சியின் தூதுவன் என்று  விழிக்கிறார் 


மேலும் எழுத்தாளர் ஜான் பிரைன் தபால்காரர்கள் குறித்து கீழ்கண்டவாறு மிக அருமையாக விவரிக்கிறார்


 விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார் அவரது கையில் உள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்த போகின்றன என்று அவருக்கு தெரியும் உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர் ஆனால் அதேநேரம் சில கடிதங்கள் சிலரது வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடியவை எதிர்பாராத செய்திகளை கொண்டவை என்பதையும் அவர் அறிந்திருப்பார் ஒரு துறவியைப் போல அவர் சுக துக்கங்களை ஒன்றாக காண்கிறார் என்கிறார் இது உண்மை தானே 


இன்றைக்கு யாரும் தபால்காரர்காக காத்திருப்பதில்லை இது மின்னஞ்சல் யுகம் ஆனால் சென்ற தலைமுறைக்கு தபால்காரர் தான் உலகம் 


கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு அது வெளியாகுமா என்று காத்திருந்த கதாசிரியர்கள் ஆகட்டும் வேலைக்கு எழுதி போட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்குமா என்று காத்திருக்கும் இளைஞர்கள் ஆகட்டும் ஊரில் வேலை செய்யும் தந்தையிடமிருந்து வரும் கடிதத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகள் , மனைவி மற்றும் பெற்றோர்கள்  ஆகட்டும் மேலும் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டைகள் ஆகட்டும் இவை அனைத்துக்கும்  நம்மிடம் கொண்டு சேர்க்கும் தபால்காரர் அவரவர் கண்ணோட்டத்தில் விண்ணுலகில் இருந்து வரும் தேவதூதன் ஆகத்தான் தோன்றினார்


 இன்றைக்கும் பழைய தபால்களை எடுத்துவைத்து வாசிப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த  வாழ்த்து அட்டைகள் அனைத்தும் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது கிடைப்பது போன்ற அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது இதனை வார்த்தைகளால் விளக்க இயலாது


தபால்காரருக்கு  தெரியாத மனிதர்களே இல்லை அவருக்கு தெரியாத ரகசியம் எதுவும் இல்லை ஆனால் அவர் அதை எதையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை இன்றைக்கும் மழை நாட்களில் குடையோடு வரும் தபால்காரர்கள் நினைவில் இருக்கிறார்கள் 


நாங்கள் பரிட்சையில்  தேர்வான போது பள்ளியில் இருந்து அனுப்பிய அஞ்சல் அட்டையை கொடுத்து விட்டு சிரித்த முகத்துடன் மிட்டாய் கேட்கும் தபால்காரர் தாத்தா கண் முன் வருகிறார் 


என்னுடைய தாய் தபால்கார தாத்தாவிடம்  என் தந்தையின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்சன் தொகை உயர்ந்ததை கூறி மகிழ்ந்ததை  மற்றும் அவரும் மகிழ்வுடன் பென்ஷன் தொகையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றதை இன்றும் என்றும் நினைவில் அகலா ஞாபகங்கள் 


இத்தகைய சந்தோசங்களை மின்னஞ்சல் என்றைக்கும் நமக்குத் தர இயலாது என்று எழுத்தாளர் கூறுவது உண்மைதான்




Monday, January 17, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்


சிறிய உண்மைகள் எனும் கட்டுரைத் தொகுப்பில் ஆசிரியர் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது கட்டுரைகளை எழுதியுள்ளார் இதில் முன்னுரையாக அவர் கொடுத்துள்ள மிக அருமையான  என்னைக் கவர்ந்த  வார்த்தைகள் சில  :


கடந்த காலத்தின் நினைவுகளால் வழி நடத்தப்படாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன ?  


குளத்தில் வீசி எறியப்பட்ட கற்கள் நீரின் அடியில் ஒன்று சேர்ந்து விடுவது போல நாம் வாசித்த விஷயங்கள் மனதினுள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன புறவுலகின் நெருக்கடி அதிகமாகும் போது நாம் அகத்தின் குரலால் வழிநடத்தப்பட துவங்குகிறோம் அதுவரை அகத்தின் குரலை நாம் கேட்பதில்லை இது பல்வேறு சூழ்நிலைகளில் நாம் உணரக் கூடிய ஒரு விஷயம் தான் 


கண்ணாடி தொட்டியில் நீந்தும் வண்ண மீன்களை வேடிக்கை பார்க்கும் ஒருவன் மெல்லத்தானும்  நீந்துகுவதாக உணருகிறான் மீனின் கண்களின் வழியே அவன் நீரின் ரகசியத்தை அறிந்து கொள்கிறான் அதுபோன்றதே வாசிப்பும்  என்கிறார் மிகவும் அருமையான உவமை. 



 பகுதி 1 - தெற்கிலிருந்து வரும் குரல் 

 

ஒரு நாவலை வாசிக்கையில் ஒரே நேரம் நாம் பல்வேறு வாழ்க்கையை வாழ்கிறோம் அதுதான் நாவல் வாசிப்பதற்கான முக்கியக் காரணம் என்கிறார் வில்லியம் சரோயன்


டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை வாசிக்கும் ஒருவன் பல்வேறு மனிதர்களை நிகழ்வுகளை வரலாற்றின் பேரியக்கத்தை கண்முன்னே காண்கிறான் பேராறு ஒன்றில் நீந்துவது போன்ற அனுபவம் இது 


உண்மையில் இதனை பல நாவல்களை வாசிக்கும்போது நாம் உணர்ந்திருக்கிறோம் சாண்டில்யன் மற்றும் கல்கியின் கதைகள் வாசிக்கும்போது வரலாற்றில் அவர் கூறிய காலத்தில் நாம் வாழ்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்  மேலும் அந்த வரலாற்று கதாபாத்திரங்கள் நம் முன்னே உலவுவது போன்று நமக்குத் தோன்றும் அங்கு நடைபெறக்கூடிய போர்க்காட்சிகள் முதற்கொண்டு நம் கண் முன்னே தோன்றி நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.  ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் வாசித்தபோது அதில் வந்த ஹென்றிஎனும் கேரக்டர் நம்மை சுற்றி எங்கேனும் ஓரிடத்தில் நாம் பார்த்த மனிதனாகவே தோன்றியது


பகுதி 2 -  காலம் என்னும் புதிர்


காலம் பற்றிய சிந்தனை இல்லாத எழுத்தாளனே கிடையாது அதிலும் கடந்த காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பெரும்பான்மை படைப்பாளிகளின் சவால் கடந்த காலம் என்பது முடிந்து போன நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை மாறாக அவை நிகழ்காலத்தின் வேர்களாக உள்ளன தனது சொந்த வாழ்வின் வழியாக கால மாற்றத்தையே எழுத்தாளன் பதிவு செய்கிறான் என்று நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா கூறுகிறார்


காலம் குறித்து விசித்திரமான கதைகள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன காலத்தை பகுக்கும்  ரகசிய முறைகளும் இருக்கின்றன ஆப்பிரிக்க பழங்குடி ஒன்றில் அவர்கள் திங்கள் செவ்வாய் என நாட்களைப் பிரித்து கொள்வதில்லை அதற்கு மாறாக நிறங்களின் வழியாக நாட்களை பிரித்துக் கொள்கிறார்கள் சிவப்பு என்பது ஒரு தினம் மஞ்சள் என்பது இன்னொரு தினம்


காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தை பதிவு செய்கிறது முதல் நரையை கண்டபோது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள் ? நரை என்பது காலத்தின் சிரிப்பு அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது 


சித்தம் கலங்கியவர்களுக்கு ஏது வயது? அவர்கள் காலமற்ற நிலைகளில்தான் வாழ்கிறார்கள். உண்மை இதனை நாம் அனேக நேரங்களில் கண்கூடாக காண்கிறோம்


பகுதி 3 - மணலின் விதி


 Collection of sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார் அந்தப் பெண் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டு வந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு பாதுகாத்து வைப்பது வழக்கம் அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார் நினைவுகளை அழியாமல் பாதுகாக்க தான் இப்படி மணலைக் கொண்டு வருகிறார் போலும் என்று கால்வினோ குறிப்பிடுகிறார் 


 இது ஒரு விசித்திரமான பழக்கம் ஒன்றும் இல்லை நாம் நம் சிறுவயதில் கூட பள்ளியிலிருந்து அழைத்துச் சென்ற சுற்றுலாக்களில்  புது ஊர்களுக்கு சென்று வரும்போது அங்குள்ள கடற்கரை மணலை கற்களை சிப்பிகளை எடுத்து வந்து இருப்போம்


கிராமப்புறங்களில் ஊரை விட்டுப் பிரியும் போது பிடிமண் எடுத்துக் கொண்டு போவார்கள் ஒரு நண்பர் சென்னையில் புது வீடு கட்டும்போது கிராமத்திலிருந்த தனது பூர்வீக வீட்டின் வாசலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து புது வீட்டின் முன்னால் போட்டுக் கொண்டார் 


மண்ணை நேசிப்பது என்பது ஒரு பிடிமானம் ஒரு பற்று. 


பொதுவாக பெண்கள் தாங்கள் சென்றுவரும் கோயில்களிலிருந்து ஏதேனும் ஒரு பாத்திரத்தை அந்த கோவிலின் மற்றும் ஊரின் நினைவாக வாங்கி வந்து வீடுகளில் வைத்துக் கொள்வார்கள். எனக்கும் அந்த பழக்கம் உண்டு



பகுதி-4 மழையும் குடையும்


 ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் " குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது ஆனால் இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள் குடை தன் வரலாற்றை மறந்து விட்டது "என்ற வரியை வாசிக்க முடிந்தது

 

குடையின் தண்டில் ரகசிய கத்தி கொண்ட பதினாறு வகை குடைகளை சீன அரசர்கள் பயன்படுத்தியதாக கூறுகிறார்கள் ஒரு காலத்தில் பிரெஞ்சு அதிபரின் பாதுகாப்பு படையில் குடையை முக்கிய ஆயுதமாக வைத்திருந்தார்கள் 


அம்பர்லா என்ற ஆங்கில வார்த்தை இலத்தின் மொழியில் அம்புரோஸ் எனும் சொல்லிலிருந்து உருவானது இதன் அர்த்தம் நிழல் என்பதாகும் 


பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் குடைகள் பெண்களுக்கான விஷயம் குடை இல்லாமல் பெண் வெளியே வருவது நாகரிகமற்ற செயலாகவும் கருதப்பட்டது


பகுதி ஐந்து - எழுத்தில் பறப்பது


பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்க துவங்குகிறோம் அந்தக் கற்பனையான பறத்தல்லில் இருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது எழுத்தாளன் சொற்களை சேகரித்து வைத்துக் கொள்வதில்லை விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு அற்புதமாக எழுதும் நேரம் நடக்கிறது என்கிறார் ஆசிரியர்


ரே பிராட்பரிக்குக் கார் ஓட்டத் தெரியாது அத்தோடு அவர் ஒரு முறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாது விமான பயணம் மீது பெரும் அச்சம் கொண்டவர் விமானம் என்றில்லை உயரமான எந்த இடத்திற்கு சென்றாலும் மயக்கம் வந்துவிடும் விமானத்தில் பறக்கவே பறக்காத பிராட்பரிதான் விண்வெளி பயணம் பற்றி ஏராளமான கதைகள் எழுதி இருக்கிறார் செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி இருக்கிறார் அவரது சொந்த பயணத்திற்கும் எழுத்தில் பிறப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகவே பிராட்பரியின் கதைகளில் விண்வெளிக்கு மனிதர்கள் போய் வந்துவிட்டார்கள் ஒரு மனிதன் எப்படி பறப்பதை கற்பனை செய்யமுடியும் என்று சிலர் கேட்கக்கூடும் அதுதான் எழுத்தின் வல்லமை எழுத்தாளன் தான் அறிந்த விஷயங்களை மட்டுமே எழுத முடியும் என்றால் பிராட்பரி எப்படி விமானத்தில் பறப்பதை விண்வெளி பயணத்தை எழுத முடிந்தது


நூற்றுக்கணக்கான அறிவியல் புனை கதைகளை எழுதிய ஐசக் ஐசிமோவிற்கு கம்ப்யூட்டரை உபயோகிக்க தெரியாது அவரது நண்பர் ஒரு முறை கணினி ஒன்றை பரிசாக கொடுத்த போது அதை மேஜையின் ஓரமாக வைத்துவிட்டு தனது டைப்ரைட்டர் மெசினில் தான் ஐசிமோ எழுதினார் ரோபோக்களை எழுத்தில் உருவாக்க முடிந்த ஒரு எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் ஒரு கணினியை உபயோகிக்க தெரியவில்லை என்பதுதான் நிஜம்


எழுத்தாளர்கள் சொந்த வாழ்க்கையை மட்டும் எழுத வேண்டும் என்றால் அவர் பிறந்த வருடத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஒரு வரியை  கூட எழுத முடியாது எழுத்தாளனின் அனுபவம் என்பது ஒரு பங்கு மட்டுமே அவனது கற்பனையும் பார்த்து கேட்ட அறிந்த அனுபவங்களும் ஒன்றாகி தான் படைப்பாகின்றது. 


பகுதி-6 மொழியே அடையாளம்


நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஷ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர் இவரிடம் மிகக் குறைவானவர்கள் படிக்கும் இட்டிஷ் மொழிகளில் ஏன் எழுதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு விற்பனையாகும் எண்ணிக்கையை வைத்து புத்தகத்தின் தரத்தை முடிவு செய்யக்கூடாது குறைவான மனிதர்கள் தன் கதையைப் படிக்கக் கூடும் ஆனால் அவர்கள் அந்தக் கதையை தனது தாய்மொழியில் படிக்கிறார்கள் மறைந்து போன நினைவுகளை மீள் உருவாக்கம்  செய்கிறார்கள் ஒரு வகையில் இந்தக் கதைகளே அவர்களின் மீட்சி மரபுத் தொடர்ச்சி என்று சிங்கர் கூறுகிறார். 


இறந்துபோன மொழியாக கருதப்பட்ட தன் மொழியை மீண்டும் மீளுருவாக்கம் செய்ய அவர்  எடுத்த முயற்சி மிகவும் அற்புதமானது.  


இட்டிஷ்மொழியில் போர்க் கருவிகள் ஆயுதங்கள் ராணுவ பயிற்சிகள் பற்றிய சொற்கள் கிடையாது என்பது வியப்பான செய்தி


 தனது மொழி ஆங்கிலத்தை விடவும் சிறப்பானது ஆங்கில மொழியில் லட்சக்கணக்கில் சொற்கள் இருக்கின்றன அதைவிட இட்டிஷ்யில் குறைவே ஆனால் இட்டிஷ் மொழியின் சொற்கள் மனிதர்களின் குணாம்சத்தை ஆளுமையை உணர்ச்சிகளை சொல்வதில் முன்னோடியாக  இருக்கின்றது என்கிறார்


கென்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளரான நுகூகி வா தியோங் ஓ ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்கிறார் ஆனால் தனது தாய் மொழியில் தான் எழுதுகிறார் தனது எழுத்தின் வேலை அமெரிக்க மக்களை மகிழ்விப்பது இல்லை அழிந்துபோன யூதர்களின் நினைவுகளை பாதுகாப்பதே அதுவும் ஒரு மொழி அழியும் போது அதன் புராதன நினைவுகள் யாவும் சேர்ந்து அழிந்து போகின்றன என்கிறார் இவரின் மொழி மீதான பற்று நம்மை நெகிழ வைக்கிறது

 

 பகுதி 13  - நாவலின் வழி தேடுதல்



ஒரு நாவலை வாசிக்கும்போது கதைக்குள் நாம் அறிந்த மனிதர்களை தேடுகிறோம் சில நேரம் நம் உருவமே கூட தெரிவதும் உண்டு கதாபாத்திரங்களின் வழியே நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறோம் பலர் இறந்து போன வாழ்க்கையை அடைய முடியாத சந்தோசங்களை கதைகளின் வழியே பெறுகிறார்கள் சில அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க கதைகளை வாசிக்கிறார்கள் 


நம் மறக்க முடியாத நினைவுகளை கதைகளாக மாற்றிக்கொண்டு விடுகிறோம் நம் பள்ளி பருவத்தை பற்றி யாராவது கேட்டால் உடனே ஒரு கதை போலத்தானே சொல்ல ஆரம்பிக்கிறோம் 


கதைகளில் நன்மை வெல்ல வேண்டும் என்று பெரும்பான்மை வாசகர்கள் நினைக்கிறார்கள் காரணம் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பது குறைவு தானே


சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு பேராசிரியர் இளவயதில் காணாமல் போன தனது சகோதரன் ஒருவனை ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் வழியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த எழுத்தாளரை தேடி அமெரிக்கா சென்றிருக்கிறார் எழுத்தாளரும் அதுபோன்ற ஒரு மனிதனை தான் உணவகம் ஒன்றில் சந்தித்த விபரத்தை சொல்லவே அது தன் தம்பி என்பதை கண்டறிந்து அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றிணைந்து இருக்கிறார்கள் அந்தப் பேராசிரியருக்கு நாவல் என்பது உண்மையை கண்டறிய உதவிய ஒரு வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு அது வெறும் புனைவு



Wednesday, January 12, 2022

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

 காற்றில் யாரோ நடக்கிறார்கள்  - 

எஸ் ராமகிருஷ்ணன் 


இந்நூல் 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பிற்கு வந்துள்ளது இந்நூலில் கிட்டத்தட்ட 50 அத்தியாயங்கள் உள்ளன இந்த அத்தியாயங்கள் கீழ்கண்ட தலைப்பின்கீழ் பிரிக்கப்பட்டுள்ளன அவை  இலக்கியம் கலை திரைப்படம் மற்றும் அனுபவம் பொது என்று பிரிக்கப்பட்டுள்ளது 


இதில் நான் வாசித்த - வாழ்விலே ஒரு முறை  - எனும் தலைப்பு குறித்து இங்கு எழுத போகிறேன்


இத்தலைப்பில் எழுத்தாளர் தான் சந்தித்த மிக எளிமையான மனிதர்கள் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் குறித்து எழுதுகிறார்


 "வாழ்வின் நுட்பங்களை புத்தகங்களில் கற்றுக்கொண்டதை விட அதிகமாக என்னை சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்னால் மறக்கவே இயலாத சில நிகழ்வுகள் இருக்கின்றன அந்த நிகழ்வுகள் மிக முக்கியமானவை அந்த செயல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் எளிய மனிதர்கள் அவர்களுக்கென எவ்விதமான சிறப்பு அடையாளமும் இல்லை ஒரு சிலரின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது செயல் என்றும் மறக்க முடியாதபடி நினைவில் தங்கி இருந்தது "என்று கூறுகிறார்


நிகழ்வு  1


ஒரு பழைய ஸ்கூட்டரில் 45 வயது தோற்றமுடைய ஒரு மனிதர் ஒரு பெரிய துணிப்பை ஒன்று பதியம் இட்ட பத்துப்பதினைந்து செடிகள் கொண்டு வருவார் அதனை நட்டு வைப்பதற்காக அவரே கையில் கடப்பாரையும் வைத்திருப்பார் பூங்காவினுள் சில இடங்களை தேர்வு செய்து மண்ணை தோண்டி செடியை நட்டு வைத்து விட்டு தண்ணீர் பிடித்து ஊற்றுவார் பிறகு சில நிமிடங்கள் அதைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பார் அப்போது அவர் அந்த செடிகளோடு பேசுவது போலவே தோன்றும் பின்னர் பூங்காவை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு சென்று விடுவார் பூங்காக்களில் மட்டுமல்லாது சாலையோரங்களில் கூட இவர் இப்படி மரங்கள் நடுவதை கண்டிருக்கிறேன்

கடந்த 10 ஆண்டுகளில் நான்கைந்து முறை அந்த மனிதரை வெவ்வேறு பூங்காவில் பார்த்திருக்கிறேன்


ஒருமுறை ஜீவா பூங்காவில் அவர் மரம் நட்டு திரும்பும்போது அவர் யார் எப்படி அந்த ஆர்வம் வந்தது என்று கேட்டேன் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை சிரித்தபடியே தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டார் அந்த சிரிப்பில் என் செயல் உனக்குப் பிடித்திருந்தால் நீயும் செய்து பாரேன் என்பது ஒளிந்திருந்தது. இதனை வாசிக்கும் போது அவருடைய அந்த சிரிப்பு என் கண் முன்னே தோன்றுகிறது நாமும் ஏன் இவரை பின்பற்றக்கூடாது என்று தோன்றுகிறது 


நிகழ்வு 2


சில ஆண்டுகளுக்கு முன்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கடிதம் வந்தது அதில் தான் கண் பார்வையற்றவர்களுக்கு வாரம் ஒருமுறை பார்வையற்றவர்கள் காப்பகத்திற்கு சென்று அதைப் படித்துக் காட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார் அவரை நேரில் பார்ப்பதற்காக சென்றிருந்தேன் டெய்லராக வேலை செய்து கொண்டிருந்தார் மிகச்சிறிய வீடு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள் மாதம் 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் தனக்கு இருக்கிறது என்று தன் வீட்டில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை காட்டினார் மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு


 அதன் பின்னர் தங்களது பகுதியில் இருந்த ஒரு பார்வையற்ற காப்பகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் 30 நபர்கள் அங்கே இருந்தார்கள் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து எனது கதைகளில் ஒன்றை வாசித்துக் காட்டும் படி கூறினார் நானும் வாசித்துக் காட்டினேன் கதை வாசித்தலின் முடிவில் எழுத்தாளரோடு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றதும் அநேகமாக ஒவ்வொருவரும் கதை சார்ந்த தங்களது மனப் பதிவுகளை பகிர்ந்து கொண்டார்கள்  பிரபலமான இலக்கியச் சந்திப்புகளில் ஏற்படாத நெருக்கம் அவர்களோடு கழித்த மாலை நேரத்தில் ஏற்பட்டது இப்படி வாரம் ஒரு எழுத்தாளர் வந்து கதை வாசித்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையற்ற ஒருவர் ஆதங்கப்பட்ட து மனதை உருக்குவதாக இருந்தது 

 

கடிதம் எழுதிய நண்பரிடம் உங்களுக்கு இதுபோல ஆர்வம் எப்படி உண்டானது என்று கேட்டேன் அவர் ஒரு நாள் மின்சார ரயிலை அருகில் அமர்ந்திருந்த பார்வையற்றவர் நான் மெல்லிய சத்தத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டு கொஞ்சம் சத்தமாக வாசித்தால் நானும் கேட்க முடியும் என்றார் அப்படி ஆரம்பித்து இப்போது வாரம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் இவர்களுக்காக செலவழிக்கிறேன் என்றார்


 சொந்த குழந்தைகளுக்கே கதை படித்துச் சொல்லவும் கற்றுத்தரவும் நேரமில்லாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் மத்தியில் இவரைப் போன்ற ஒரு சிலரின் செய்கை என் மனதில் எப்போதும் மறக்க முடியாததாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

 

 உண்மையிலேயே இவருடைய வழியை நாமும் பின்பற்றி பார்வையற்றோர் இல்லங்கள் மற்றும் அனாதை சிறார்கள் வாழுகின்ற அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் நல்ல கதைகளை அவர்களுக்கு வாசித்து காட்டுவதன்

  மூலம் அவர்களுக்கும் நமக்கும் மன சந்தோசத்தை கொடுக்கும், 


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட இந்த கதை சொல்லும் நிகழ்வு வாரம் ஒருமுறை வகுப்புகளில் நடக்கும் என்றால் அவர்களின் சிந்தனையையும் நம்மால் தூண்ட இயலும்



நிகழ்வு 3


இந்நிகழ்வில் ஒரு ஆசிரியர் கிராம மக்களிடையே அடிப்படை அறிவியல் அறிவு வளர்ப்பதற்காகவும் மூடநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை தெளிவுபடுத்துவதற்காக காஞ்சிபுரம் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள கிராமம் கிராமமாக சென்று தனது சொந்த முயற்சியால் விஞ்ஞான பயிற்சிகளை செய்து வருவதாக என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தார்


 அதனடிப்படையில்  காஞ்சிபுரம் அருகிலுள்ள ஐயங்கார்குளம் என்ற கிராமத்திற்கு சென்று அவரை சந்திப்பதற்காக  நான் காத்திருந்தேன் 6 மணி அளவில் அந்த ஆசிரியர் தனது பைக்கில் கையில் இரண்டு பெரிய பைகளுடன் வந்து சேர்ந்தார் ஊரின் மையமாக இருந்த இடத்தில் அதனை வைத்துவிட்டு யார் வீட்டில் இருந்தோஒரு மர மேஜை வாங்கி வந்தார் பின்னர் தன்னுடைய பையிலிருந்த ஸ்லைட் போடும் கருவி ஒன்றை வெளியே எடுத்து வைத்து தான் கொண்டு வந்திருந்த சில ஸ்லைட்டுகளை அதில் பொருத்தினார் பின்னர் எங்கிருந்தோ மின்சாரம் இழுத்து வந்து சில நிமிடங்களில் இன்னொரு பையிலிருந்த மைக்  மற்றும் ஒலிபெருக்கியை எடுத்து பேசத் துவங்கினார் பத்தே நிமிடங்களில் அந்த இடத்தில் கிராமத்தின் அனைத்து மக்களும் திரண்டனர்  

 

இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? பூமி எப்படி சுற்றுகிறது ? கிரகங்கள் என்றால் என்ன ? அமாவாசை எப்படி வருகிறது? கிரகணம் ஏன் ஏற்படுகிறது ? என்று அடிப்படையான விஞ்ஞான அறிவை கிராம மக்களுக்கு தனது ஸ்லைடுஷோ வழியாக நடத்திக்காட்டினார் இரண்டு மணி நேர நிகழ்ச்சி ஊரே தன்னை மறந்து போயிருந்தது 


ஆயிரம் புத்தகங்கள் கற்றுத்தரும் பாடங்களை விடவும் இந்த எளிய மனிதர்கள் செய்யும் செயல்கள் எனக்கு அதிகம் கற்றுத் தந்திருக்கின்றன இன்னும் சொல்வதாயின் இவர்களின் நிஜமான அக்கறை தான் இன்றும் வாழ்வை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கின்றன என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். 


 இயற்கையை நேசிக்கும் அந்த 45  வயது மனிதரைப்போல் மற்றும் பார்வையற்றவர்களுக்கு தனது வாசிப்பின் மூலம் அவர்களின் சிந்தனையை தூண்டிவிடும் அந்த தையற்காரரை போல் மற்றும் கிராம மக்களிடையே உள்ள மூட நம்பிக்கையை அழித்து அடிப்படை விஞ்ஞான அறிவை விதைக்க முயன்று கொண்டிருக்கும் அந்த ஆசிரியரை போல் தன்னால் இயன்ற செயல்களை செய்யும் இத்தகைய மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் நாமும் ஏன் அவர்களில் ஒருவராக இருக்க கூடாது? 

Tuesday, January 11, 2022

கோகிலவாணி யை யாருக்கும் நினைவிருக்காது

 கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது   - 

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்


இந்தக் கதையை படித்த போது நானும் ஒரு பெண் எனும் நிலையில்  மனமுடைந்து போனேன் கோகிலவாணி போல துன்புற்ற துன்புருகின்ற பெண்களை நாம் வாழ்வில் நேருக்கு நேர் நிறைய காண்கிறோம் ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது?  குறைந்தபட்சம் அவர்களுடைய மனோ நிலையை புரிந்து கொண்டு அவர்களை தவறாக பேசாது இருத்தலே அவர்களுக்கு நாம் செய்யும் உதவி


 இந்த சமூகத்தில் ஒரு ஆண்  சுய ஒழுக்கமின்றி   செய்யக்கூடிய வன்மத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை இந்தக் கதை எடுத்துரைக்கிறது ஆசிரியர் அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து இந்தக் கதையை எழுதியுள்ளார் 


இந்தக்கதையின் நாயகி கோகிலவாணி அவளுக்கு 15 வயது ஆகும் போது காதலிப்பதை பற்றிய கற்பனைகள் மனதில் புகுந்து விடுகின்றன பள்ளி நேரத்திலும் அவள் தோழிகளும் ரகசியமாக காதலைப்பற்றி பேசுகிறார்கள் அப்போது சாலையில் பயணத்தில் பொது இடங்களில் பதின்வயது இளைஞர்களை காணும்போது இதில் யார் தன்னை காதலிக்க போகின்றனர் என்று நினைக்க ஆரம்பிக்கிறாள்  அவளுடைய அறியாமையை நினைத்து நாம் இந்த இடத்தில் வருத்தப்பட வேண்டும்.   பதின்வயதில் ஆண் பெண் இருவருக்கும்  சரியான வழிகாட்டுதல் இல்லாமையினால் ஏற்படக்கூடிய உணர்வுதான் இது


பத்தாவது வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு சிலமாதங்கள் அருகாமையில் உள்ள எஸ்டிடி பூத்தில் வேலை செய்கிறாள் எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்கிறான் அவள் ஒரு பெண் என்றும் யோசிக்காமல் அவள் முன்பாகவே பச்சை பச்சையாக போனில் பேசுகிறான் தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பது இல்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருக்கிறது


 இந்நிலையில் எஸ்டிடி பூத் உரிமையாளர் மாம்பழத்தில் புதிதாக  தொடங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றுகிறான் அப்போது அவள் தினமும் மின்சார ரயிலில் போய் வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்போது மகேஷ் எனும் பையனை சந்திக்கிறாள் இரண்டு நாட்களில் இரண்டு பேரும் பேசி பழகி விட்டார்கள் அவனும் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் தான் தினமும் அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டு வந்து தருவான் பக்கத்தில் உட்கார்ந்தால் கூட அவள் மீது கைபடாமல் நடந்து கொள்கிறான் அவள் போட்டிருக்கும் புதிய உடையோ பாசியோ பொட்டோ ஹேர் கிளிப் எதுவாக இருந்தாலும் உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று அவளை பாராட்டுகிறான் அதனால் தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக  பெருமை கொள்கிறாள் கோகிலவாணி. 


இந்நிலையில் ஒரு நாள் அவள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது நேர் எதிரில் நின்று கொண்டிருந்த ஒருவன் அவளை பார்த்து கை அசைக்கிறான் தன்னுடைய உள்ளங்கையில் ஐ லவ் யூ   யுவர்ஸ்  துரை என்று எழுதி காண்பிக்கிறான் ஒரு நாள் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அவளிடம் வந்து உனக்காகத்தான் தினம் தாம்பரத்தில் இருந்து ரயிலில் வருகிறேன் என்று அவளிடம் கூறுகிறான் மற்றொரு நாள் படத்துக்கு போவோமா என்று கேட்கிறான் அப்போது கோகிலவாணி எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்கிறாள் அப்போ நீ என்ன லவ் பண்ணலையா என்று கேட்கிறான் நான் எதுக்கு உன்ன லவ் பண்ணனும் என்று கோகிலவாணி கேட்கிறாள் பின்னர் அந்த பெண் சொல்கிறாள் நான் மகேஷ் என்பவரை லவ் பண்ணுகிறேன் பிரச்சனை பண்ணாமல் போய்விடு என்கிறாள் அப்போது துரை அவளை பச்சை பச்சையாக திட்டுகிறான் திட்டி விட்டு நீ என்னை லவ் பண்ணித்தான் ஆகணும் நான் முடிவு பண்ணிட்டேன்  அப்படின்னு  அவ கிட்ட சொல்கிறான் 


இதனை கோகிலவாணி தான் விரும்பும் மகேஷிடம் சொல்கிறாள் மகேஷ் அவனிடம்தான் பேசுவதாக சொல்கிறான் ஆனால் துரை மகேஷ்சை அடித்து விடுகிறான் இதனால் அவன் இவளை நேரடியாக பார்த்து இது நமக்கு ஒத்து வராது விலகிக் கொள்வோம் என்கிறான் கோகிலவாணி மனமுடைந்து போகிறாள்


மீண்டும் துரை கோகிலவாணி இடம் வந்து நான் மட்டும் தாண்டி உன்னை லவ் பண்ணுவேன் வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே உன் மேல ஆசிட்  ஊத்துவேன் பார்த்துக்கோ என்று கடுமையாக திட்டுகிறான் நீ என்ன லவ் பண்றியா இல்லையான்னு இப்பவே தெரியனும் அப்படின்னு சொல்லி மிரட்டுகிறான் அதுமட்டுமின்றி இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் மீது ஆசிடை ஊற்றுகிறான் கொதிக்கும் நெருப்பு முகத்தில் நுழைத்து விட்டது போல் எரிய ஆரம்பித்தது துரை கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடுவது மட்டும்தான் அவளுக்கு தெரிந்தது அவள் முன்பிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மங்கத் துவங்கியது


கோகிலவாணி 6 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறி மாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் 


பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை 

லவ்வர் டி என்று நக்கலாக கேட்கிறார் மருந்தாளுநர் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்க மாட்டான் நீ எங்கு வேணாலும் போகலாம் எந்த நேரம் வேணாலும் வீட்டுக்கு வரலாம் உன்னை யாரு பாலோ பண்ண போகிறார்கள் என்று நக்கல் அடிக்கிறான் கோகிலவாணிக்கு அவர்கள் கூறும்போது ஆத்திரமாக வந்தாலும் வாய் திறந்து பேசவில்லை நாம் செத்தே போயிருக்கலாம் என்று யோசிக்கிறாள் வாழ்க்கையை எப்படி கடந்து செல்லப் போகிறோம் என்று நினைத்து வேதனை கொள்கிறாள்  அந்த வலி ஆசிடின் கொதிப்பை விட அதிகமாக இருந்தது. 


அவள் சாவகாசமாக சுற்றி திரிந்த உலகம் ஒரு நாளில் அவளிடம் இருந்து பிடுங்கி எறியப் பட்டது தோழிகள் குடும்பம் படிப்பு வேலை அத்தனையும்  அவளிடமிருந்து விலகிப் போய் விட்டது மருந்து மாத்திரைகளும் களிம்பு மருந்துகளும் அவளது அன்றாட உலகமாய் இருந்தது அழுது ஓய்ந்து ஒடுங்கிப் போகிறாள்


 இந்நிலையில் ஆசிரியர் அவள் தன்னை பற்றி யோசிப்பதை இவ்வாறு விளக்குகிறார் பல நேரங்களில் தன்னை கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்து போன தீக்குச்சி போலவே உணர்ந்திருக்கிறாள் தான் ஒரு தலைப்பு செய்தியாக போகிறோம் என்று கோகிலவாணி ஒரு நாள் கூட நினைத்துக் பார்த்திருக்க மாட்டாள் கோகிலவாணி தலைப்பு செய்தியாக அதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது அவள் நம்மை குற்றம் சொல்லவில்லை ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள் நம் யாவரையும் விட்டு விலகிப் போய் இருக்கிறாள்


உபாசனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவளை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது 32 அது ஒரு பார்வையற்றவர்களுக்கான சேவை செய்யும் நிறுவனம் பார்வை குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர் அதனால் யாரும் அவளைக் கேலி செய்வார்கள் என்ற பயமின்றி   அவள் வேலைக்கு போய் வர துவங்கினாள்


சென்ற வருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்க்கிறாள் அவனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ஏனோ துறையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போல் இருந்தது அவளுக்கு அந்தக் குழந்தையையும் கொஞ்சலாமா என்று கூட தோன்றியது ஆனால் அவன் இவளைப் பார்த்ததும் மனைவியிடம் ஏதோ சொல்லி அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்


 அந்த நிலையில் கோகிலவாணி யோசிக்கிறாள் நாம்தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும் அவன் ஏன் என்னை பார்த்த உடன் எழுந்து ஓடுகிறான் பயமா கடந்தகாலத்தில் நினைவுகள் எதுவும் தன் முன்னால் வந்து நின்று விடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்


 ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனைப் பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம் ஆனால் கோகிலவாணிக்கு? 


உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்து இருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்திற்கு பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள் எதற்காக இவ்வளவு குரூரமான  தண்டனை தனக்கு வழங்கப்பட்டது என்பதை நினைத்து

 அவள் அழுதுகொண்டே இருக்கிறாள்