Wednesday, July 28, 2021

இளவயது விதவை பெண்களின் நிலை

 


சிறுவயதில் விதவையான பெண்களை

 நிரந்தரமான விதவைகளாக

 வைத்திருப்பதற்கு எல்லா ஏற்பாடுகளை யும்

 இந்த சமூகம் செய்து வைத்திருக்கிறது. 


"அவ புருசன் செத்து பத்து வருச

மாச்சு. எந்த ஆம்பளையையும் ஏறெடுத்தும் 

பாக்கமாட்டா. நாக்குமேல பல்லப் போட்டு

ஒரு வார்த்த அவளப் பேசிற முடியாது.


எதுக்கும் எடம் கொடுக்கமாட்டா நெருப்பு

மாதிரி இருப்பா"என்று ஒரு பெண்ணைச்

சொல்லிசொல்லியே மனோ ரீதியாக

 அவளைப் பலவீனப் படுத்தி

 "புனிதம்"என்னும் புதை

குழிக்குள் அவளைத் தள்ளி விட்டு

விடுகிறார்கள். 


அவளுக்கு மறுமணம்

குறித்த சிந்தனையே எழாதவாறு அவ்

வளவு ஜாக்கிரதையாகப் பார்த்துக்

கொள்கிறார்கள் .

அவளும் அவளை அறியாமலேயே

அந்த "புனிதத்திற்குள்"

சிக்கி தன்னுடைய ஆசாபாசங்களைச் 

சாகடித்துக் கொள்கிறாள்.


மூடநம்பிக்கையென்பது 

சாமியாடுவது மண்சோறு

சாப்பிடுவது அலகுகுத்தி ஆடுவது 

மட்டுமல்ல இதுவும் ஒருவகையான

மூடநம்பிக்கைதான்.

                      

முதல் குரல் புத்தக சுருக்கம்

நூல்: முதல் குரல்

ஆசிரியர்: பாரதி பாஸ்கர்


பாரதி பாஸ்கர் - நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர். பண்டிகைக்கால சன் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில், தனக்கென தனியிடத்தைப் பெற்றிருப்பவர். தன் பேச்சுத்திறமையால் நம் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டவர். இந்நூலுக்கு முன்னரே ஆசிரியரின் 'சிறகை விரி, பற!' மற்றும் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...' நூல்களை வாசித்திருக்கிறேன்.


'முதல் குரல்' - இங்கு, மூன்று பிரிவுகள் ஒரே நூலில் - ஒன்பது கட்டுரைகள், ஒன்பது சிறுகதைகள், எட்டு பதிவுகள். 


கட்டுரைகள் பற்றி:


'முதல் குரல்' கட்டுரையினூடே நூல் ஆரம்பமாகிறது. ஆண்கள் மட்டுமே ஒரு காலத்தில் தன்வசப்படுத்தியிருந்த மேடைப் பேச்சைப் பெண்களாலும் நிகழ்த்த முடியும் என்று காட்டிய சரஸ்வதி பாய் பற்றிய கட்டுரை அது. அவ்வளவு எளிதாகப் பெண்களைச் சமூகம் அங்கீகரித்துவிடுகிறதா என்ன? சரஸ்வதி பாய் பட்ட அவஸ்தைகளையும், அவதூறு வார்த்தைகளையும் விவரிக்கிறது கட்டுரை.


ஐஸ் ஹவுஸ் - சென்னை மெரீனா கடற்கரையருகே அமைந்திருக்கும் ஓர் அதிசயக் கட்டிடம். அக்கட்டிடம் பாரதிக்குப் பள்ளி நாட்களில் வகுப்பறையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கால நினைவுகளைப் பதிவிட்டதோடு, அக்கட்டத்தின் பின்னணியை, அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். 


எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி ஒரு கட்டுரை. அவரின் வெற்றிக்குப் பின்னணியில் அவர் கணவர் இருந்திருக்கிறார். வழக்கமான நமது கூற்றை இங்கு மாற்றிக் கூறலாம், ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக்கூடும் என்று. அல்லவோ!


சிறுகதைகள் பற்றி:


முத்தான ஒன்பது கதைகள் நமக்காக. 


'பூப்போல பூப்போல' என்றொரு கதை. தத்தெடுத்த பச்சிளங்குழந்தையைப் பேணி வளர்க்க, மகப்பேறு விடுமுறை வேண்டிப் போராடி வெற்றி பெறும் ஒரு பெண் பற்றியது. என்னை மிகவும் கவர்ந்த கதை. 


'அப்பா என்னும் வில்லன்' என்றொரு கதை. பெரும்பாலும் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு வில்லனாகத்தான் தெரிகிறார்கள். இங்கு கௌரிக்கும் அப்படித்தான். எப்போது பார்த்தாலும் 'படி, படி' என்று அவளை விரட்டும் அப்பா. அந்த வில்லன் எப்படி அவளுக்கு ஹீரோவாக மாறுகிறார் என்பதுதான் கதை. கதையோட்டம் மி்க அழகு! கடைசியில் ஒரு வரி வரும். "இந்தப் பெருமைமிக்க விருதை வாங்க உங்களோடு 49 பேர் போட்டி போட்டார்கள். அவர்களிடம் இல்லாதது, உங்களிடம் இருப்பது என்ன?" என்று கௌரியிடம் கேட்பார்கள். அதற்கு அவளின் பதில்: என் அப்பா. 


'1-2-3-4-1' என்று எண்களைத் தலைப்பாகக் கொண்ட ஒரு கதை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்களே. அதனைக் கண்முன் காட்டும் ஒரு கதை. வீட்டிலிருக்கும் திலகாவிற்குத் தன் பக்கத்து வீட்டு மைதிலியைப் போல வங்கிப்பணிக்குச் செல்ல ஆசை. மைதிலிக்கோ, அவள் மேலதிகாரி அஞ்சனா பதவிமீது ஆசை. அஞ்சனாக்கு வங்கியின் நிர்வாக அதிகாரி மீனா மஹாதேவன்மீது பொறாமை. மீனா மஹாதேவன் இறுதியில் முதலில் குறிப்பிட்ட திலகாவைக் கண்டு, 'அட இவள்போல நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லையே' என்று ஏங்குவதாய்க் கதை முடிகிறது. எவருக்கும் இருப்பதில் திருப்தி இருப்பதில்லை, இல்லாதவற்றை எண்ணியே ஏங்கித் தவிக்கிறோம், இல்லை!


'வெங்கட் மற்றும் விக்ரம்' என்றொரு கதை. என்னதான் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே தட்டில் கைகழுவும் நண்பர்கள் என்றாலும் ஒரு கட்டத்தில் பிரிவு என்பது எதார்த்தம், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நிதர்சனத்தைக் குறிப்பிடும் ஓர் அழகான கதை.

பெண் முன்னேற்றம் பற்றி நிறைய பேசிவரும் பாரதி, பெண்களுக்காக எழுதிய பதிவுகளில் சில இங்கு இடம்பெறுகின்றன. ஒரு பெண் என்னதான் தொழிலில், வேலையில் சிறந்துவிளங்கினாலும், அவள் வெற்றிக்கு வயிற்றெரிச்சலோடு சில விமர்சனங்கள், 'என்னதான் அவள் இந்த ஆபிஸில் பெரிய ஆளாக இருந்தாலும், வேலையில் ஜொலித்தாலும், அவள் ஒரு நல்ல அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மகளாக இல்லையே!' என்றும், 'அவள் எப்படி இந்த இடத்துக்கு வந்தாளென்னு எனக்குத் தெரியாதா? அந்த மேனேஜரோட குலுங்கிக் குலுங்கி அவள் சிரிக்கும்போதே எனக்குத் தெரியும்' என்றும் ஏன் வந்து விழுகின்றன என்று வினவுகிறார். உண்மைதானே! சமூகம் ஏனோ பெண்களைக் குற்றவுணர்வுடனே வைத்துக்கொள்ள விரும்புகிறது. 


அலுவலகத்தில் அழும் பெண்களைப் பற்றிய ஒரு கட்டுரை. சில பெண்கள் அலுவலகங்களில் எங்கும் அழுகை, எதிலும் அழுகை என்று கண்ணீரை ஒரு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துவதைப் பேசுகிறது. அது கூடாது என்கிறார் பாரதி. 'நீ முன்னேற விழைகிறாயல்லவா? அப்படியெனில் சிரமங்களையும் சவால்களையும் கூடுதலாக நீ சந்தித்துதான் ஆக வேண்டும்' என்று பெண்களுக்குக் கனிவுடன் அறிவுறுத்துகிறார்.


கட்டுரைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண் - பெண் புரிதல் பற்றி, சம உரிமை பற்றி அவர் பயன்படுத்திய கீழுள்ள வரிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்:


'என் வீட்டுக்காரருக்கு வெந்நீர் வைத்துக்கொள்ளக்கூடத் தெரியாது!' என்று நாம் சொல்வது நம் கணவர்களுக்கு அவமானம். 'என் மனைவிக்குக் கரண்ட் பில் கூடக் கட்டத் தெரியாது' என்று கணவர்கள் சொல்வது மனைவிகளுக்கு அவமானம்.


மொத்தத்தில் முதல் குரல் - பெண்களின் குரல், சம உரிமைக்கான குரல்!

Saturday, July 24, 2021

சிறிது வெளிச்சம் எஸ் ராமகிருஷ்ணன்

என்னை திகைக்க வைத்த சில வரிகள்.

மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு . குழந்தைகளின் சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா காரணமில்லாத சிரிப்பு அது.  குழந்தைக்கு நினைவுகள் இல்லை அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கொண்டிருக்கிறது. 

தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது. அதை நாம் உணர்வதே இல்லை நாமும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை . 

பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது. 

நோயை விட கொடியது தனிமை.  நோயுற்ற நேரங்களில்தான் மனது அடுத்தவர்களின் மீதான தனது உறவை மறுபரிசீலனை செய்து கொள்கிறது . ஏங்குகிறது . 

யாரை நமக்கு மிகவும் பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு நாம் ஒரு கடிதம் கூட எழுத மாட்டோம். நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதப்படாமல் விட்ட கடிதங்கள் இருக்கின்றன . நேரடிப் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும் எழுத்து மௌனமும் வலிமையும் கொண்டது அதை முழுமையாக நாம் உணரவே இல்லை. பேச்சுமிக ஆனவுடன் எழுத்து சுருங்கிவிட்டது.

 உறவுகள் சுருங்கி விட்ட சூழலில் கடிதம் அவசியமற்ற வடிவமாகவே பலருக்கு தோன்றுகிறது . கடிதம் என்பது வெறும் பரிமாற்றம் மட்டுமல்ல. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நம் மனதின் குரல் .  நேரில் சொல்ல முடியாத தவிப்பை கடிதம் சொல்லிவிடும் . 

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள் அது தானியத்தைப் போன்றது விளைநிலத்தில் விதைக்கப் படும்போது வளர்ந்து பலன் அளிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது . விதையாவதும் வீணாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது .

கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைப்பது தான் பெரும் துயரம் . அவமதிப்பு வெறுப்பு என எத்தனையோ வலிகளை தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றுடன் இருக்கிறார்கள் மனிதர்கள். 

வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது.  ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது . 

அதை அறிந்து கொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால் எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை . எந்த வாழ்க்கையும் பயனற்றது மில்லை

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பாலுறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா?  

திருமண முறிவுக்கு ஆண் மட்டுமே காரணம் அல்ல பெண்களும்  காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மையான திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. 

உறவை விட பணம் பிரதானமாக விட்டது. எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகளும் சச்சரவுகளும் வந்தபோதும் குடும்பம் பிரிவதில்லை .

ஆனால் வசதியான திருமணங்கள் எளிய காரணங்கள் கூட இல்லாமல் பிரிந்து விடுகின்றது என்பதே நிஜம்

பெண்களுக்கு திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்து கொள்ள முடியாதது .

அது ஒரு நீர் ஊற்றை போல அவள் கடந்த காலத்தின் நினைவுகளை விட்டு கொண்டே இருக்கிறது . அமைதி எப்போதும் புன்னகையில் தான் வேர்விட்டு இருக்கும் என்பார்கள் .ஆனால் இன்று திருமணம் ஆனதும் பெண்களிடமிருந்து இயல்பான சிரிப்பு மறைந்து போகத் தொடங்குகிறது. ந சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தான் .

பேருந்தில் சாலையோரங்களில் அலுவலகங்களில் காண்கிறேன் சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை . 

ஏதேதோ யோசனைகள் கவலைகள் விளக்கமுடியாத திகைப்பு போன்றவற்றுடன் கூடிய  முகங்களையே பொதுவெளியில் அதிகம் காணமுடிகிறது 

காலில் அப்பிய ஈர களிமண்ணைப் போல மனவேதனை களோடு தான் பெண் தன் வாழ்வினை கடந்து போகிறாள்

பனியில் வாழும் பெண்குயின் தன் இணையை தேர்வு செய்வதற்கு காதலுடனும் தேடுகிறது . கண்டுகொள்கிறது. தேடி சேர்ந்த பிறகு ஒரு போதும் வேறு ஒரு பெண்ணை நாடுவதே இல்லை .

சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் அந்த ஏக்கத்துடன் அதே இடத்தை சுற்றி சுற்றி வருகிறது. வேறு எந்த பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறது இணை சேரும் மிருகங்கள் கூட தங்களுக்குள் அன்புடன் இருக்கின்றன. 

நவநாகரீகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வாலில்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை அளிக்கிறது

புத்தகங்கள் கற்றுத்தரும் நீதி 

போதனைகளை விட எளிய மனிதர்களின் நடைமுறை சாத்தியங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுகின்றன . 

குடும்பம் என்பது சேர்ந்து சாப்பிடுவது சேர்ந்து உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல  சேர்ந்து வாழ்வதற்கான வெளியும் கூட. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு புரிந்து கொள்ளும் மனதும் தன்னை திருத்திக் கொள்ளும் அக்கறையும் பரஸ்பர அன்பும் திறந்த உரையாடல்களும் அவசியம் .அது தவறுவதே இன்றைய குடும்ப விரிசலின் அடிப்படைக் காரணம் என்பேன். 

சிறுவர்கள் எப்பொழுதும் கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறார்கள் .உலகின் ஒவ்வொரு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. 

புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் யோசிக்கவும் விரும்புகிறார்கள் .நமக்கு அதற்கான நேரம் இல்லை விருப்பம் இல்லை அப்படி குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 

பள்ளியில் படிக்க வைப்பது மட்டுமே தங்களது ஒரே வேலை என்று பெரும்பான்மையான பெற்றோர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்

 மாணவனுக்கு கல்வியை மட்டுமே பள்ளி அறிமுகம் செய்யும் . வீடு தான் நிஜமான பள்ளிக்கூடம் மனித உறவுகளையும் பழக்கவழக்கங்களையும் ருசியையும் விருப்பத்தை ரசனையையும் தனித்திறன் களையும் வீடுதான் அறிமுகப்படுத்துகிறது. 

கற்றுத்தருகிறது 

இன்று உள்ள பிரதான பிரச்சனை கல்வி நிலையங்கள் அனைத்தும்  பணமயமாகி விட்டன என்பது மட்டுமல்ல வீடுகளும் எதையும் சிறுவர்களுக்கு கற்றுத் தருவது இல்லை என்பதும்தான் .

குழந்தைகள்  நமக்கு எதையோ கற்றுத் தருகிறார்கள் . அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை அதை விளக்கிச் கொள்வது அவ்வளவு எளிதல்ல

புத்தகம் வெறும் காகிதம் அல்ல . கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால் அகத்தை காட்டுவதற்கு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன 

புத்தகம் இன்னொரு பிரபஞ்சம் அதனுள்ளே இந்த பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத பல புதிருக்கான பதில் காணப்படுகிறது. 

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவம் ஆகிறது மனிதர்களின் நினைவுகள் அழிந்து போவது இல்லை அவை எழுத்தில் சொல்லில் வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொள்கின்றன .

புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன் உலகின் நினைவுகளும் கனவுகளும் நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம் அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம். 

வாழ்க்கை இடமிருந்து எதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம் எதை கைவிட்டு இருக்கிறோம் எதைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் முதியவர்களின் கேள்விகள் அறியாமையிலிருந்து எழுவதில்லை மாறாக ஆதங்கத்தில் இயலாமையில் வயதிலிருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம்

Wednesday, July 21, 2021

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறு குறிப்பு

 


வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்


''நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். 


நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சி பெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்'' - 


இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து... ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 


குழந்தைகளின் மனநிலை! 


''வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்'' என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய  ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். 


அதனால் தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ''குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.'' 


''அவர் ஒரு சிந்தனையாளன்!''


சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 


இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ''உன் மகன் ஆல்பர்ட்டைப் பார்... எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்'' என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்,  ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. 


எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல... தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி... அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்'' என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.


ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது... நூற்றுக்கு நூறு உண்மை.  ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்; சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். 


எளிமைக்கு உதாரணம்!


அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது... அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து... ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ''இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்'' என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம்... ''ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன... அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா'' என்றார்.


எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்... ''அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்'' என்றவர், ''அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்'' என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ''எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா'' என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. 



வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே... வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது... எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர்.


 அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ''எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது'' என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்... ''இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்'' என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது. 



கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம்,  அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ''நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்'' என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ''தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்'' என்றார், அடக்கத்துடன்.


''அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது'' என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்... ''மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது'' என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்தார்.


விசாவிற்காக காத்திருக்கிறேன் - அம்பேத்கர்

 விசாவிற்காக காத்திருக்கிறேன்

பி. கே. அம்பேத்கார்


பெரிய தத்துவங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை.. பிற சமூகத்தவர்கள் பசித்தால் சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.. தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் கடையில் தண்ணீர் வாங்கி குடிப்போம்.. ஒரு இடத்திற்கு போக தனியாக வண்டி அமைத்துக் கொள்வோம்.. சட்டையில் ஒட்டிய அழுக்கை அருகில் இருக்கும் ஏதோ ஓர் நீர்நிலையில் கழுவுவோம்.. கால் வலித்தால் அங்கிருக்கும் நாற்காலியில் உட்காருவோம்.. காசிருந்தால் தங்க இடம் கிடைக்கும்.. 


இவை அனைத்தும் இரண்டு மடங்கு காசிருந்தாலும் 'தீண்டத்தகாதவர்' என்று சமூகம் கூறிய காரணத்தினால் அம்பேத்கருக்கு மறுக்க படுகிறது.. இந்த அனுபவத்தினை சிறுவயதில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறார்.. நாம் பிரஞ்யையே இல்லாமல் செய்யும் மேற்கண்ட ஒவ்வொரு செயலையும் அவர்கள் காத்திருந்து, பயந்து, யோசித்து, மறைந்து செய்ய வேண்டியுள்ளது.. சில நேரங்களில் அப்படியும் செய்ய இயலாமல் போகிறது.. 


இன்றும் இந்நிலைகள் முற்றாக மாறிவிடவில்லை.. தொடரும் தீண்டாமை குற்றங்கள் குறைந்தபாடில்லை.. புது வடிவம் எடுத்துள்ளதென்று வேண்டுமானால் கூறலாம்.. புத்தகத்தில் வரும் அம்பேத்கரின் சொற்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..


மதங்களை கடந்து இந்தியாவில் தீண்டத்தகாதவர் அனைவருக்கும் தீண்டத்தகாதவராகவே இருக்கிறார்.. இவற்றையெல்லாம் தன் வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுத்து கூறுகிறார் அம்பேத்கர். அது மிகப்பெரிய தத்துவமாகிப் போகிறது!


அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்..  மிகவும் பாரமான ஒரு உணர்வை கொடுத்துள்ளது இந்த நூல்.. 


சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

 


காதலின் விசித்திரம் புரிந்துகொள்ள முடியாதது.20 வயதில் தோன்றும் காதல் இயற்கையானது. 


ஆனால் ,நடுத்தர வயதில் தோன்றும் காதல் ? அதை எப்படி எதிர்கொள்வது.எப்படிக் கடந்து செல்வது? 45 வயதில் ஏற்படும் எதிர்பாரத காதல் ,

பல ஆண்களைத் தடுமாற வைத்திருக்கிறது.தவறான முடிவுகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


அதேபோலவே 30 ஐக் கடந்த பெண்ணுக்கு ஏற்படும் காதலும். குடும்பம் ,கணவன் ,குழந்தைகள் என்ற இயல்பான உலகில் இருந்து அவளை வெளியேற்றுகிறது. அவளது அன்றாட வாழ்வு சிடுக்கும் சிக்கலும் ஆகிவிடுகிறது.


குடும்பத்துக்காகவும் , சமூக கட்டுப்பாடுகளுக்காகவும் பெண்ணோ ,ஆணோ தங்களது ரகசிய காதலை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். 


ஆனால் , நடுத்தர வயதில் திடீரென காதல்வசப்படுவது பலருக்கும் நடந்தேறி இருக்கிறது. அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் பின்விளைவுகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் கசப்புமானவை.


தங்கள் வயதை மறந்து அவர்கள் நடந்துக்கொள்ளும் விளையாட்டுத்தனம் ஒரு பக்கம் என்றால் ,மறுபக்கம் தங்கள் வயதை நினைத்து அவர்கள் போடும் வேஷங்களும் ஒளிவுமறைவுக்களும் இந்தக் காதலை குழப்பத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன.அல்லது ஆறாத மன வலியை, ஏமாற்றத்தைத் தருகின்றன.


நடுத்தர வயதின் காதல் , அற்ப நாளில் முடிந்து போய்விடும் சிலந்திவலை போன்றது என்று அறிந்தே காதலிக்கத் துவங்குகிறார்கள். 


பல நேரங்களில் அதை கைவிட முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு துயரப்படுகிறார்கள்.


கார்ல் மார்க்ஸ் - ஜென்னி

 


நான் முதன் முதலாக படித்த (1987)) ஒரு உண்மையான காதல் கதை கார்ல் மார்க்ஸ் ஜென்னி யினுடையது. எத்தனை முறை படித்தேன் என்பது கணக்கில் இல்லை. தோழர் ராமராஜ் படிக்க சொன்ன கதை. 

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை

உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். 


முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே  ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும். காரல் மார்க்ஸ், உலகுக்கு கம்யூனிச சித்தாந்தங்களை வெளிக்கொண்டுவந்தவர். இப்படி அனைத்தையும் உலகுக்கு கொண்டுவந்தவருக்கு வாழ்கை முழுவதும் யார் உறுதுணையாக இருந்திருப்பார் என்றால் அது அவரது மனைவி ஜெனியாகத்தான் இருக்கமுடியும். 


"மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. 


இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.


பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். ஆனால்  ஜெனியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜெனி மட்டும்தான். 


கல்லூரிக்கு சென்றவுடன் ஜெனிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜெனிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜெனியின் பதில் கடிதத்திற்காக காத்திருந்திருந்தார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.


மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜெனியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜெனி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். 


நீங்கள் நினைப்பது போன்று இவர்கள் குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை. ஜெனியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். 


ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார். இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜெனியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜெனியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. 


பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜெனியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.


இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும்.


 இயற்கையை ரசிக்க சென்ற மார்க்ஸ் வீட்டை பூட்ட மறந்துவிட திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான். இந்த நிகழ்வை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கிறார். சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். 

 

காரல் மார்க்ஸுக்கு போக, போக சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்குபார்த்தாலும் எதிர்ப்புகளாக இருக்க நாட்டை விட்டு வெளியனுப்பப்படுகிறார். உடன் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எந்த யோசனையும் இல்லாதவராக இருக்கிறார் மார்க்ஸ். இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் எதுவும் சொல்லாமல் ஜெனியும் இருக்கிறார்.


 காதலனை பார்த்து எந்த நேரத்திலும் "வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நீங்கள் நாட்டுக்கு ஒன்று செய்யவேண்டாம்" என சொல்லியதே இல்லை. வறுமையினால் இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் இறந்திருக்கிறது. சுற்றிலும் கடன் நண்பர்கள் உதவியுடன்தான் வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று நடக்கும்போது கூட மார்க்ஸ் எதோ ஒரு சமூக யோசனையில்தான்  இருந்திருக்கிறார்.


இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும்  இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல்,  அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. .


 அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். 

சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன்

 


வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக்கொள்ள முடியாத ஊமை வலி.அதிலும் சொந்த வீட்டில் குடியிருந்துவிட்டு பொருளாதாரக் காரணங்களுக்காக வாடகை வீட்டுக்குப் போவது , மனமறிந்த வேதனை .அந்தப் பிரிவு , துண்டிகப்பட்ட பல்லியின் வால்போல நமக்குள்ளாகவே துடித்துக்கொண்டு இருக்கக்கூடியது.


வாடகை வீடோ , சொந்த வீடோ எதுவாயினும் , நாம் வசிக்கத் துவங்கியதும் நம் ஆசைகளும் ஏமாற்றங்களும் படிந்து நமது அந்தரங்க வடிவமாகிவிடுகிறது. 'வீடு'.வீட்டின் சுவர்களுக்கு மட்டும் பேசத்தெரிந்தால் , எவ்வளவு கதைகளைச் சொல்லும் தெரியுமா?

சுவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்ற சிந்தை நமக்கு இருப்பதில்லை.மாறாக ,ஒரு போர்வை போல நமது அழுகை வெளியே தெரியாமல்தன் அகன்ற கைகளால் சுவர்கள்  மறைத்துக் கொள்கின்றன. சுவரிலிருந்து உதிரும் காரைகளைபோலவே நம் இயலாமைகள் வீடெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன.


வீட்டின் கதவுகள் , ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்துவிடாமலும் , உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய்விடாமலும் தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி. 


வீடு மாறிப்போனவர்களின் பேச்சில் எப்போதாவது வசித்த வீடுகள் பீறிடுகின்றன."அந்த வீட்டில் ஒரு கிணறு இருந்தது அந்த வீட்டின் பின்புறம் நிலா வெளிச்சம் படிக்கட்டில் அடிக்கும்.அந்த வீட்டில் மழை பெய்யும்போது கேட்கும் சத்தம் வேறுவிதமாக இருக்கும்.அந்த வீட்டின் தரை குளிர்ச்சியானது'என்று எதையோ சொல்லி வீட்டின் நினைவுகள் பீறிட்டுவிடாமால் அடக்கிக்கொள்கிறோம்.


சிறுவர்கள் , வசித்த வீடுகளை உடனே மறந்துவிடுவதில்லை. அதை கடந்து செல்லும் சந்தர்பங்களில் எல்லாம் , 'அது நம் வீடுதானே ...! என்று அடையாளம் காட்டுகிறார்கள். 

அந்த வீட்டினை ஏக்கத்துடன் திரும்பிப்பார்க்கிறார்கள். நமக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று உள்ளூர ஆசை இருக்கக்கூடும்.நாம் தயங்கி நிக்கிறோம்.பல நேரம் சமூக கூச்சங்களுக்கா அதை விலகி விடுகிறோம் .ஆனால் ,  நாம் வசித்த வீடுகள் நம் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது

மௌனம்

 


மௌனம் மனதை கட்டுபடுத்தும் 

சிறையாய் இருப்பினும்

பல வினாக்களுக்கு

விடையாகவும் இருந்துள்ளது

மொழிகள் சொல்லா அன்பை

பல நேரங்களில்

மௌனம் உணர்த்திடும்


வெண்ணிற இரவுகள் - ரஷ்ய நாவல் கதை சுருக்கம்

 


வெண்ணிற இரவுகள்

ஆசிரியர் - ஃயோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில் -ரா.கிருஷ்ணையா


இயக்குனர் ஜனநாதன்  அவர்களால் இயற்கை என்ற திரைப்படம் வெண்ணிற இரவுகள் நாவலை தழுவி எழுக்கப்பட்டதே.


கதையில் கதையின் நாயகன் தஸ்தயேவ்ஸ்கியே.கனவு உலகிலேயே வாழும் நம் நாயகனுக்கு அதிர்ஷ்ட வசமாக ஒரு இரவில் நாஸ்தென்காவின் பரிச்சயம் கிடைக்கிறது.அவர்களுக்குள் ஏற்படும் நான்கு இரவு சந்திப்புகளும் அவர்களின் உரையாடலுமே வெண்ணிற இரவுகள்.


இந்த உலகில் வாழ புடிக்காதவர்களுக்கும் அல்லது வாழ முடியாதவர்களுக்கும் கனவுலகமே ஆறுதல். அப்படி படைக்கபட்ட உலகம் அவனுடையது அவனுக்கானது. அங்கு அவனே ராஜா. அப்படிப்பட்ட கனவுலகில் படைக்கப்பட்ட ராணியை அவன் சந்திக்க நேர்ந்தால், அவளின் காதல் அவனுக்கு கிடைக்க பெறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவனின் மன ஓட்டமே வெண்ணிற இரவுகள். 


இயற்கை படத்தில் ஒரு வசனம் ' இந்த உலகில் அஃறிணை அனைத்துக்கும் காதல் பற்றி தெளிவு இருக்கிறது. ஆறறிவு படைத்த மனிதனிக்கு தான் இதில் பிரச்சினை வருகிறது'.

எவ்வளவு உண்மை இந்த வரிகள்.


இரவிற்குள் செல்லும் முன் வெஸ்கியின் வரலாறு கொஞ்சம் திக்குமுக்காடத்தான் செய்கிறது.


யாருக்குத்தான் சோகம் கஷ்டம் இல்லை. இருக்கட்டும் ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு கொடிய அனுபவங்கள் அமையக்கூடுமா ?


பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து தொடங்கும் கதை 1848 ல் எழுதப்பட்டதொன்று. பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் விசித்திரமான நிலைமையையும் அதற்கு பின்னால் அமைந்த கரைந்து போன இரவின் தாக்கத்தையும் விவரிக்கும் நூல், 


தஸ்தயேவ்ஸ்கி இளமைப்பருவம் அது, 

 பீட்டர்ஸ்பர்க் நகரத்தை விட்டு எல்லாரும் வெளிநகரம் புகுவதாயும், தான் தனித்துவிடப்பட்ட ஒரு ஜடமென உணர்கிறார் வெஸ்கி. விவரமறிந்தது முதல் இந்நாள் வரை தனிமையைத் தவிர வேறு எதையும் அனுபவிக்காத அந்த ஜீவன் நாஸ்தென்கா எனும் பெண்ணை சந்திக்கிறது.


காதல் விரக்தியில் ஏற்கனவே தடுமாறியிருந்த அப்பெண்ணின் நிலையுணர்ந்து முதன்முதலாய் மனம்விட்டு பேச தொடங்குகிறார் வெஸ்கி. இருவரின் உரையாடல் நான்கு நாட்கள் வரை நீடிக்கிறது. அவ்வளவுதான் கதை.


 இந்நான்கு நாட்களுக்குள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்.இவர்கள் நட்பு காதலில் முடிந்ததா ? இல்லை  தனிமையையே தஸ்தவெஸ்கி தழுவிக்கொண்டாரா ? சுயநலம் என்று சொல்லாமல் யதார்த்தமாய் இருந்தது ஒவ்வொரு வரிகளும். இடையிடையே கொஞ்சம் நாடகத்தின் வழக்காய் பேச்சுவார்த்தை தொடர்வதால் கொஞ்சம் சோர்வு தட்டுவதாய் இருந்தது.


வெண்ணிற இரவுகள் காதலினால் மூழ்கியதா ? இல்லை ஏமாற்றத்தால் முடிந்ததா ? அடுத்த இரவிற்காய் காத்துக்கொண்டிருக்கிறார் ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

ஆயிஷா - நாவல் கதை சுருக்கம்

 



புத்தகம் - ஆயிஷா 

ஆசிரியர் - ரா.நடராஜன்


 இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் உங்கள் மனதை ஒரு சோகம் கவ்வும்.


ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை யாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.


துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.


ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.


10 ம் வகுப்பு மாணவி ஆயிஷா 11 ஆம் வகுப்பு மாணவிக்கு கணக்கு சொல்லித்தரும் போது அவளின் அறிவு அங்கே கொண்டாடப்படுவதற்கு மாறாக தண்டிக்கப்படுகிறது. அறிவைக் கொலை செய்யப்படும்போது உண்டாகும் வலி, வேதனை, ரணம் இங்கே யாரால் புரிந்து கொள்ளப்படுகிறது.


சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள். ஆனால் அதே அறிவியலே அவளை நம்மிடமிருந்து பிரித்தெடுக்கும் போது நம் மனதை மெல்லக் கவ்வும் வலியைத் தவிர்க்க முடியவில்லை.


இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.


ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலைத் தான் எழுதியதாக ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார்.


கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.


பக்கங்கள் முக்கியமில்லை. சில புத்தகங்கள் பல பக்கங்களை தாண்டியும் நமக்குள் எந்த விதமான சலசலப்பையும் ஏற்படுத்தாது, ஆனால் இந்த ஆசிரியரின் எழுத்து நடை நமக்கு வலிகளை ஏற்படுத்தியதோடு உடல் சிலிர்பையும் உண்டாக்குகிறது.


புத்தகத்தை முடிக்கும் போது மனம் கணமாகியிருந்தது

பேரம் பேசுதல்

 


கூடை வியாபாரியை 

அழைத்து, 

கொள்முதல் விலையையும் 

விசாரித்து..........

துணிந்து கேட்ட விலைக்கு 

பணிந்தது வறுமை, 

படிந்தது அடாவடி 

பேரம்............

சொன்னதில் பேர்பாதி 

விலை கேட்டு, 

இரண்டொன்று கூடவே 

இலவசமும் பெற்று, 

பணம் கை மாறும் போது 

சிரித்துக் கொண்டே 

சில்லரை இல்லையென கூறி 

மேலும் இரண்டு ரூபாயை 

குறைத்து.........


அடடா, 

விந்தை உலகின் 

விசித்திர மனிதர்களே, 

எங்கே கற்றீர்கள் இந்த 

பஞ்சதந்திர மந்திரத்தை..........

வேதனை சுமந்து 

வெறுங் கூடையுடன் 

செல்லும் இவர்களின்

நாளைய முதலீட்டிற்காய்

சற்று கருணையைக் 

காட்டுங்கள். 

நினைவலைகள்

 


அம்மாச்சி வீட்டின் நினைவலைகள் 

- நானும் பாண்டிய னும் அமர்ந்து படித்த அந்த டேபிள் அதனுள் அமைந்த இரண்டு தனி தனி shelf (4th to  10th படித்த கால கட்டம் ). கண் முன் நிழல் படமாக தெரிகின்றது.  

- தாத்தாவுடன் செலவழித்த காலகட்டங்கள், சேட்டை செய்து மிக அன்பாக அவரிடம் திட்டு வாங்கிய நாட்கள் 

-மாமாவின் அன்பான வார்த்தைகள் அம்மாச்சி யின் கண்டிப்பு கலந்த அரவணைப்பு. வாழ்வின் இலக்கணத்தை கற்று தந்த விதம். 

- வீட்டின் முன்பு அமைந்த முருங்கை மரம்,  மொட்டை மாடி,  நாங்கள் ஓடி விளையாடிய அழகான சுற்று சுவர். 

- விற்ற போது இழப்பின் வலி அதிகரித்தது. 

இதுவும் கடந்துபோகும் 


கடவுள்



வறுமை 

வாழ்விலும்

அடுத்த 

உயிரை 

அரவணைப்பவர்களை

கடந்து செல்லும் போது... 

கருணை காட்டுங்கள். 

ஒரு வேளை 

இவர்கள் கூட

கடவுளாக 

இருக்கலாம்.


உறவு பாசப்போராட்டம்

 தற்போது பிள்ளைகள் தங்களிடம் பாசமாக இல்லை என்று வருந்தும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

 முதியோர் இல்லங்களுக்கு தள்ளப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்து தான் வருகிறது இந்த நிலை சரியானதல்ல 

பெற்றோர்களை தன் இல்லத்தில் வைத்து அன்போடு பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இந்நிலை ஏன் நேர்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் 

பெற்றோர் பிள்ளைகளிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது ஆழமானது பிள்ளைகள் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது அல்ல அறிவுப்பூர்வமானது மட்டுமே

 பெற்றோரிடம்  தன் பிள்ளைகள் பிறந்தது முதல் இன்றுவரை உள்ள அத்தனை நிகழ்வுகளும் நினைவுகளும் அணுவணுவாக  மிக ஆழமாக பதிந்து கிடக்கின்றன.

 ஆழமான உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது . ஆனால் அறிவால் எழுகிற பாசம் ஆக்க பூர்வமானது.

 தாய் தன் குழந்தையிடம் செலுத்தும் பாசம் என்பது இயற்கையின் நியதி .சந்ததி வளர இயற்கை வகுத்துள்ள திட்டம்.

ஆனால் எவ்வளவோ ஒன்றுபட்டு வாழ முயன்றும் பல பிள்ளைகளாலும் பெற்றோர் களாலும் அது முடியாமல் போவது ஏன் என்பதை முதியவர்கள் சிந்திக்க வேண்டும்.

 முதியவர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் அவர்கள் பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழ இயலும்.

 மனம் பக்குவப்படும் நிலையில் தங்கள் விருப்பப்படி தங்கள் வரையறைக்கு உட்பட்டு தங்கள் பிள்ளைகளும்  வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழாது. 

எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றமும ஏற்படாது.   அப்போது தேவையற்ற உபதேசங்களை செய்யும் பழக்கம் முதியோர்களிடம் இருந்து தானாக விடை பெற்று விடும் 

பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே பெரும்பாலும் சொல்லும் காரணம் வீட்டில் அவர்கள் விடாது குறைகூறி பேசுவதையும் அறிவுரை கூறுவதை தாங்க முடியவில்லை.

 தங்கள் பிள்ளைகளையும் மருமகளையும் நெறிப்படுத்தி வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பை கடவுள் தங்கள் மேல் சுமத்தி உள்ளதாக பெரும்பாலான பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதனால் அவர்கள் ஓயாமல் அறிவுரை சொல்லவும் பிள்ளைகளும் மருமகள்களும் செய்யும் செயல்களை கடுமையாக விமர்சிக்கவும் தலை படுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளி தாண்டி விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றோருக்கும் இருப்பதில்லை பிள்ளைகளுக்கும் இருப்பதில்லை இதுவே சிக்கல்களுக்கு அடிப்படை காரணமாகும் .

எது சரி எது தவறு என்பதை பெற்றோர் தங்கள் வாழ்க்கை முறை மூலம் போதிக்க வேண்டுமே தவிர தங்கள் வார்த்தைகள் மூலம் அல்ல .

உன்னை அறிந்தால்

பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்றே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நம்மில் பலரின் எண்ணமாக உள்ளது 

இதுதான் இயற்கையின் திட்டமா ?

எதற்கு இந்த பிறப்பு ?

 என்னில் இருக்கும் நான் யார்?

 நான் என்னவாக இருக்க வேண்டும் இத்தகைய கேள்விகள் ஒரு காலகட்டத்தில் எல்லோர் மனதிலும் வந்து போகும் 

சிலர் மட்டுமே அதற்கான விடையை தேட தொடங்குகிறோம்  வெகு சிலர் மட்டுமே விடையை கண்டடைகிறோம்

தன்னை அறிதலின் அவசியமும் முக்கியத்துவமும் ஒருவரின் வாழ்வை மேன்மை அடையச் செய்யும் 

இப்பிறப்பின் காரணத்தை அறிய முற்படும் போது ஞானம் பிறக்கிறது ஞானத்தின் வழி நிற்கையில் தெளிவு பிறக்கிறது 

நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதை நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது

 நமக்கு கிடைக்கும் வாய்ப்பை உணராமல் செல்வோம் எனில் வாழ்வின் மீது நம்பிக்கை பிறக்காது 

தன்னை அறிந்து கொள்ள நம் திறமையை நாம் முதலில் தெரிந்து கொள்ளல்  அவசியம். நம் திறமையை அறிந்து கொள்வது எப்படி?

 எந்த செயலில் நமக்கு இயற்கையாகவே ஈடுபாடு அதிகம் இருக்கிறதோ அதனை மெருகேற்ற வேண்டும் 

நமது கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் மற்றவர்களில் இருந்து அது நம்மை பிரித்துக் காட்ட வேண்டும் 

எப்போது நமது எண்ணத்தோடு ஒன்றென அச்செயல்  கலக்கிறதோ அன்றிலிருந்து அது நமக்கு தனி அடையாளத்தை தர ஆரம்பிக்கும் 

நமக்கான வாய்ப்பை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் .பொறுமை விழிப்புணர்வுடன் காத்திருக்க வேண்டும் .

வாய்ப்பு கிடைத்தவுடன் செயல்திறனுடன் அசாத்தியமான சாதனைகளை நோக்கி நம் மீதான நம்பிக்கையை பலப்படுத்தி செயல் புரிதலின் மூலம் நல்ல வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் 

கிடைக்கப்பெற்ற வாய்ப்பை திடமாய் பிடித்து எல்லை யில்லா அர்ப்பணிப்புடன் இடைவெளி இல்லா ஈடுபாட்டுடன் வெற்றி தோல்வி என்ற வட்டத்திற்குள் சிக்காமல் உழைப்பை அதிகரித்தல் அவசியம்.

 உழைப்பிற்கான பலன் சில நேரங்களில் தாமதம் அடையலாம்! 

முழுமையான பலன் விரைவில் நம்மை வந்தடையும் எந்த சாதனையும் நம்மால் சாத்தியமே 

நம்மை நாம் அறிந்திருந்தால்

Friday, July 16, 2021

 அம்மா

நீ உயிரோடிருந்த பொழுதுகளைவிட

பன்மடங்கு வலிமையாக

என்மனதை ஆக்கிரமித்திருக்கும்

உன்னை இல்லை என்று

எப்படி நினைப்பது

உன்மறைவுக்கு பிறகு நிகழும்

நிகழ்வுகளில் கூட நீ இருக்கிறாய்

உன் அத்தனை  பாவனைகளுடனும்

என்னுடன் உரையாடி  கொன்டே இருக்கிறாய்

நான் படித்த மற்றும் இனி படிக்கப்போகும்

புத்தகங்களில் இருந்து நான் பெற்ற

மற்றும் பெறப்போகும்  அறிவு எதுவும்

நீ எனக்கு தந்துவிட்டு சென்றிருக்கும்

வாழ்கை அறிவுக்கு ஈடாகாது

ஊமையான துயரங்கள்

நீண்ட இரவுகளாக மாறுகின்றன

இதுவும் கடந்து போகும்.